முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் எம்.டி.வாசுதேவன் நாயர் ஒரு மாஸ்டர்? | இறுதி யாத்திரை நாவல் வாசிப்பு அனுபவம்! (சுருக்கமாக)

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இறுதி யாத்திரை நாவலை கோவையிலிருந்து திரும்பி கொண்டிருந்த பயணத்தின் போது வாசித்தேன். பாதி நாவல் மட்டுமே வாசிக்க முடிந்தது. வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள் காலையில் அதனை முடித்து விட்டு அடுத்து வாசிப்போம் என்ற நினைப்பில் படிக்கத் தொடங்கினேன். சற்று முன் தான் வாசித்து முடித்தேன். ஆனால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. எப்போதுமே ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஏனென்றே தெரியாத ஒரு அமைதி வந்து மனதில் அமர்ந்து கொள்ளும். அது நீடிக்கும் நேரம் அந்த புத்தகத்தின் செறிவைப் பொருத்தது.

எம்.டி.வி ஏன் ஒரு மாஸ்டர் என்பதை இந்த நாவலின் வழியாக உணர முடிந்தது. ஆரம்ப அத்தியாயங்களில் யார் எதை சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகித்து கொள்ள சிறிது நேரம் எடுக்கிறது. ஒன்றிரண்டு முறை பின்னால் சென்று வாசிக்க நேரிடும். ஆனால் அது கொஞ்ச நேரத்திற்கு தான். நாவலின் பேட்டர்ன் பிடிபட்டவுடன் இலகுவான வாசிப்புக்கு நாம் நகரத் தொடங்கிவிடுவோம்.
வரிகளுக்கிடையேயான சொல்லப்படாத அர்த்தங்கள் தான் நாவலின் எடையைத் தீர்மானிக்கிறது. அத்தனை ஆழமாக அதுவும் வெளிப்படையாக சொல்லாமலே வாசகருக்கு ஒன்றை புரிய வைக்க முடியும் என்பதெல்லாம் மாஸ்டர்களினால் மட்டுமே சாத்தியம்.
அப்பாவின் மரணத்திற்கு நாட்டின் வெவ்வேறு திசையில் இருந்து வந்து சேரும் சகோதரர்கள். அவர்களுக்கிடையேயான உறவு. அப்பாவிற்கும் அவர்களுக்குமான தருணங்கள். அப்பா சுயபோகங்களை விரும்பக்கூடியவர். மகன்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்கிற கேள்வி வரும் போது வெறுமையே எஞ்சுகிறது. ஆனால் மகன்கள் அவரை பார்த்து கொள்கிறார்கள். அவருக்கு வருவாய் ஈட்ட போன இடத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது. கணக்கில்லாத அளவில் உறவுகள் இருக்கின்றன. அப்பாவோடு உணர்வு ரீதியா துண்டாக இருப்பவர்கள் ஊர்ப்பேச்சுக்காக ஒன்று சேர்க்கிறார்கள்.
இதே நேரத்தில் வாசித்த யாவரும் இணைய இதழில் வெளிவந்த வைரவன் அண்ணாவின் 'சுருள்' கதையும் நினைவுக்கு வருகிறது. கோடி அப்பாக்கள் இருப்பார்களெனில் கோடி கதைகளும் இருக்கத் தானே செய்யும்.
சிற்றலைகள் ஒன்றாக உருவாக்கி ஒரு நேரத்தில் ஒன்றோன்று சேர்ந்து கரையில் சில்லு சில்லாக உடைவது போல தான் இந்த நாவலும்.
தனிப்பட்ட முறையில் என்னோடு தொடர்பு படுத்தி பார்க்கக் கூடிய சில தருணங்கள் இதில் உண்டு. எம்.டி.வி.யின் நாவல்களை எல்லாம் இனி வாசிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...