முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு

முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன்.



இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது.

தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் துறை, இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக உருக்கொண்டிருக்கிறது. இங்குப் பணிபுரிபவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதாக பொது பார்வையில் புரிந்துக் கொள்ளப்படுகிறது. “உனக்கென்னப்பா, ஐடி எம்ப்ளாயி" என்கிற வார்த்தைகளுக்கு பின் இருக்கும் மனநிலையைத் தெளியச் செய்ய இந்த நாவல் அவசியமாகிறது. நட்சத்திர அந்தஸ்தில் வாழ்பவர்களின் உலகம், நட்சத்திரவாசிகளின் உலகம் இப்படித் தான் இருக்கும் என அவர்களின் வாழ்க்கையை பற்றிய மதிப்பீடுகளுக்கு முறிவு மருந்தாக எழுதப்பட்டிருக்கும் நாவல் ‘நட்சத்திரவாசிகள்’.

பிசிறில்லாத நாவலின் நடை அத்தனை இலகுவாக அதனுள் செல்ல அனுமதிக்கிறது. ‘ஊர்ல எங்க வீடு ஒன்றரை கிரவுண்ட் சார். ஒரே சமயத்துல இருபது பேர் அடுத்தவங்க மேல கை கால் படாம படுத்துத் தூங்கலாம்.’ அலுவலக உதவியாளரான ராமசுப்புவுக்காக வண்டி ஓட்டிவரும் டாக்சி ஓட்டுநரின் வார்த்தைகள் இவை. தங்கள் ஊரைத் தொலைத்து நகரத்தில் அலையும் அத்தனை பேரின் கதையும் அது தான்.

ஐ.டியில் பேர் சொல்லி அழைக்கிற அளவுக்கு கூட சுதந்திரம் இருக்கும். ஆனால் எதிர்த்துப் பேசிவிட மட்டும் முடியாது. எந்த அலுவலகமும் தனக்கே உரிய அதிகார படிநிலையைக் கொண்டிருக்கிறது. சத்தி, வேணு, அர்ச்சனா, ஆர்.கே, சாஜு எனத் தனது சீனியர்களுடான வாழ்வு நித்திலனுக்கு எட்டு வருடங்களாகப் பழகியிருக்கிறது. சராசரி தமிழக இளைஞன். மிடுக்கும் ஆங்கில தொனியும் தெரியாதவன். நித்திலனோடு கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். இத்தனை வருடங்கள் இங்குப் பணி புரிந்தும் இன்னும் தள்ளிப் போகும் பதவி உயர்வுக்காக வருத்தப்படும் ஒருவன்.

நித்திலன் மணந்து வந்திருக்கும் மீராவோடு வாழ முடியாது தன்னை எப்போதும் அலுத்துக் கொள்கிறான். தன் வேலையை அலுத்துக் கொள்கிறான். அலுவலகத்தில் தான் தினமும் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிலையில் உள்ள ஜெப்-இன் அழுத்தம் ஒரு புறம். ஒரு சிக்கலான சூழலில் உழலும் அவனைச் சுற்றிய உலகம் அதை விட மேலும் சிக்கலானது.



ஐடி ஊழியர் (மாதிரி படம்)

இங்கு உங்களுக்கு எத்தனை வருட அனுபவம் என்பதெல்லாம் முக்கியமே இல்லை. பதினைந்து வருட உழைப்பும் ஒரே நாளில் பறிப்போகி விடக்கூடும். வேலைக்கு உத்தரவாதம் என்பதெல்லாம் உங்கள் வாயிலாக நிறுவனம் இலாபம் ஈட்டினால் மட்டுமே சாத்தியம். அப்படியே இலாபக்கணக்கில் இருந்தாலும் மேல் உள்ள தலைவர்களின் நல்லெண்ண பட்டியலில் உங்கள் பெயர் இல்லாவிட்டால் நீங்கள் நாளைய செலவுக்கு கூட யோசிக்க வேண்டி வரும்.

அபாயம் என்பது இது தான். நீங்கள் பந்தயம் கட்டியக் குதிரை இனி ஓடாது என பாதி வழியில் சுருண்டு விழுவதுப் போல. உங்கள் வாழ்க்கை மொத்தமும் உங்களைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் கூட, இந்த ஊசலினால் அல்லலுறும் என்பதே சிக்கல். எதிர்கொள்ளும் பணியிட சிக்கல்களைக் கூட பொருத்துப் போக வேண்டி அல்லது பொருத்ததுப் போல நடிக்க வேண்டியதாகி விடுகிறது. இதில் வரும் வருவாயைக் கணக்கிட்டு மாத தவணையில் வாங்கிய கடன்களின் தவணை குறித்த கவலை வாட்டி எடுக்கும். ஒரு வகையில் நாவலில் ஒரு இடத்தில் சொல்வது போல் இது ஒரு சிக்கலான வலை தான்.உள்ளே நுழைந்துவிட்டால் வெளியேறுவது அவ்வளவு எளிதல்ல.

இத்தனை ஆபத்து இருந்தாலும், இந்தப் பிரம்மாண்டம் அள்ளிக் கொடுக்கும் வசதிகள் மறுபுறம். விவேக்-க்கு நடந்தது அது தான். கிராமத்தின் பெயர் கூடத் தெரியாத ஊரிலிருந்து அமெரிக்கா சொல்வதெல்லாம் இங்கு மட்டுமே நடக்கக் கூடியது. அதற்கு கொடுக்கும் விலை பெரிது. தன் காதலியை நினைத்து வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது.


எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன்

கார்த்திக் பாலசுப்ரமணியன் உருவாக்குகிற நாவல் உலகம் என்பது நம்மையும் பார்வையாளராக இணைத்துக் கொள்கிறது. சஞ்சீவ் (சாஜு) தன்னுடைய உழைப்புக்கு சரியான உயர்வு கிடைக்காத போது அங்கிருந்து வெளியேற முடிவு செய்கிறான். அப்படிச் சொன்னாலாவது தான் மதிக்கப்படுவோம் என்கிற எண்ணத்தைக் கசக்கிக் குப்பையில் எறிகிறார்கள் மேலாளர்கள். இங்கு நீங்கள் செய்துக் கொடுக்கிற வேலையை அதை விட பாதி விலையில் செய்துக் கொடுக்க இன்னொருவர் தயாராக இருப்பார் என்பது கொடுக்கும் அழுத்தம் -உணர்ந்தால் தான் தெரியும் போல.

பள்ளி முடித்து வரும் மாணவர்களைக் கூட பயிற்சியும் கல்வியும் அளித்து அவர்களின் பணியை குறைந்த ஊதியத்தில் பெற்றுக் கொள்கிறது நிறுவனம். இலாபத்தின் மீது மட்டுமே தன் கண்களை கொண்டிருக்கிறது.

வேலை கிடைத்தும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நிற்கும் போது செக்கில் நின்று விடும் மாடுகளை விரட்டும் கோல் போல ஒன்று மேல் வந்து ஒன்று விழும். மீண்டும் முதலில் இருந்து ஓட வேண்டும். ரேட்டிங், கஸ்டமர் சேட்டீஸ்பேக்சன், அப்ரைசல், ஆன்சைட் என ஓடுவதை உறுதி செய்யத் தான் இத்தனை அளவுகோல்களும்.

பார்கவி அழுத்தம் தாங்காது தன் மனநிலையே தவறும் கோட்டுக்குச் செல்கிறாள். மனம் பிறழ்ந்த நிலையில் அவளது செயல்கள், பயமுறுத்தக் கூடியது. ஆனாலும் வாழ்க்கை நமக்கு ஒன்றைக் கையளிக்க வேண்டும் என்றால் நாம் அதற்கு ஒரு ஈடு கொடுத்தாகவே வேண்டும்.

அகம் புறம் என பாத்திரங்களின் உணர்வுகள் செயல்கள் எல்லாவற்றையும் தெளிந்த மொழியில் எழுத்தாளர் சொல்லும் போது இந்த நாவல் முழுவதும் நாம் நடப்பவற்றை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு இடத்திலும் நாவலாசிரியர் இடைப்பட்டு நியாயமோ தெளிவுரையோ கொடுக்க முற்படவில்லை. நாவல் தன்னை தானே நியாயப்படுத்திக் கொள்கிறது.

அர்ச்சனா, மீரா, பூஜா, பனிமலர், பிச்சைமணி, டெய்ஸி -என கதையின் பெண் பாத்திரங்கள் அத்தனை தூரம் நேர்மையாக உருவகப்படுத்தப்படுகிறார்கள். கதையின் முதல் அத்தியாயத்தில் சுத்தம் செய்யும் பிச்சைமணியின் வார்த்தைகள் இவை, ‘காத்தும் வெயிலும் படாம என்னத்தைக் காணப் போறோம்னு சொல்லு. எப்படித்தான் நாள் முழுக்க இந்த அடைச்ச ரூமுக்குள்ள வேலை செய்யுதுங்களோ தெரியலை. அதனாலதான். என்னமோ வெளியில வந்தா இதுக அந்தக் கூத்தடிக்குதுங்க.’ இப்படி எதார்த்தமாக பேசும் பெண் குரல்கள் நாவல் முழுவதும் பரவலாக தென்படுகின்றன.

ஆண்களை விட பெண்கள் தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாகவும் அந்த முடிவுக்காக எல்லை வரை போராடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மீரா ‘ராகுல் வேண்டாம்’ என முடிவெடுக்கும் போதும் ‘நித்திலன் தன் உணர்வுகளை மதிப்பதில்லை’ என முடிவெடுக்கும் போதும், அர்ச்சனா தன் மகள் பவிக்குட்டிக்காக தன் நேரத்தைச் செலவழிக்க முடிவதில்லை என்றபோதும் வேலைக்காக அவள் நிற்கிற முடிவுகளும், பூஜா தனக்கு இரண்டாவது குழந்தை குறித்து எடுக்கும் முடிவும் காட்டுவதெல்லாம் ஒன்றை தான் - பெண்கள் மனது அலைபாய்வதில்லை. அவர்கள் உலகத்தில் யூகத்தை தாண்டி கொடுமையாக எதுவும் நடந்துவிடுவதில்லை.

நித்திலன், சாஜு, வேணு, விவேக் என எல்லோரும் சஞ்சலப்படுகிறார்கள். தங்களைச் சார்ந்தவர்களுக்காக யோசித்து தங்களை வலிந்து வருத்தப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியான ஆண்-பெண் மனநிலையில் இந்தத் துறை என்னவாக தாக்கம் செலுத்துகிறது என ஒரு கோணத்தில் நாவலை வாசிக்க முடியும்.

தம்பி ராமையா ஒரு படத்தில் சொல்வது போல, “துக்கப்பட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு…” என வாழ்க்கை பூச்சாண்டி காட்டிய பிறகு நல்ல நிலைக்கு வந்துவிடுவோமா எனக் கேட்டால், “அதுவே பழகிடும்” எனப் பதில் வரும். அப்படியாக தான் இலட்சக்கணக்கில் விளக்குப் பூச்சிகளாக இளைஞர்கள் ஐ.டி. தெருக்களில் உழன்றுக் கொண்டிருக்கிறார்களோ.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கல்வியும், வேலைவாய்ப்பும், பணிச்சூழலும் அவ்வாறாக தான் அமைகிறது. இதில் கிடைக்கிற பொருளாதார நிறைவு கூட வேறு துறைகளில் சாத்தியமாவதில்லை.

இந்தக் கட்டுரையில் கூட நான் உள்நுழைந்த நிறைய இடங்களை நீங்கள் பார்க்கலாம். ஆனால் நாவலில் பேச அத்தனை இருந்தும் ‘நான் ஒரு ஊடகம் தான். என் வழியே நீங்கள் இந்த உலகத்தைப் பாருங்கள்’ என அனுமதிக்கிற இயல்புக்கே இந்த நாவல் கொண்டாடப்படலாம். நிறைய கிளைக் கதைகள். பரப்பு அதிகம். இன்னும் கொஞ்சம் ஆழமாக விரிந்திருக்கலாம் எனத் தோன்றவும் செய்கிறது.

துறை சார்ந்த எழுத்துக்கள் வெகுவாக அருகிக் கிடக்கிற சூழலில் இந்த நாவல் எடுத்து வைத்திருப்பது முதல் அடி. இயல்பு வாழ்க்கையில் இத்தனை பிரபலமாக உள்ள துறையின் உள்ளிருந்து எழுகிற படைப்பு அத்தனை நிறைவாக இருக்கிறது.

இந்த நாவலுக்காக விருது பெறும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு