முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்


முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez)

மொழிபெயர்ப்பு: அருமை செல்வம், அசதா

காலச்சுவடு @2016

(மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)




     ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.

     கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோடு தொடர்புடைய எல்லோரையும் அவன் உட்பட, நினைவு பதிவுகளின் சேகரத்தை துருவி நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு முழு வடிவிலான பதிவை உருவாக்க விரும்புகிறான். அவனது பதிவே காப்ரியேலின் இந்நாவல்  ‘Chronicle of a Death Foretold’.


அவர்கள் அவனைக் கொல்ல இருந்த அன்று...

     இப்படியாக தான் நாவல் தொடங்குகிறது. சந்தியாகோ நாஸார் துருக்கியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இப்ராஹீம் நாஸார் மகன். தந்தையின் இறப்பிற்கு பிறகு தங்களது பண்ணையை நிர்வகித்து வருகிறான். அவனது நெருங்கிய நண்பனான கதைசொல்லியின் அத்தை மகள் ஆங்கெலா விகாரியோவிற்கும் நகரத்திற்கு பெண் தேடுவதற்காகவே  ஆறு மாதங்களுக்கு முன்பு வந்த பயார்தோ சான் ரோமானிற்கும் திருமணம் நடைபெறுகிறது. கொலை நிகழும் நாளுக்கு முன்னிரவில் தான் திருமணம் முடிந்திருந்தது. அதன் கொண்டாட்டங்கள் விடியற்காலை வரை தொடர்கிறது.

     பயார்தோ சான் ரோமான் முதலிரவில் தன் மனைவி ஏற்கனவே கன்னி கழிந்திருப்பதை அறிகிறான்.  வறுமை குடும்பத்தை சேர்ந்தவளான அவளை மீண்டும் தாய் வீட்டிலேயே கொண்டு சென்று விட்டுவிடுகிறான். அவளது இரட்டை சகோதரர்கள் இதையறிந்து அதற்கு காரணம் யாரென இவளிடம் கேட்கிற போது சந்தியாகோவின் பெயரைக் குறிப்பிடுகிறாள். அவர்கள் இருவருக்குமே அப்படி நிகழ்ந்ததாக நாவலில் எந்த இடத்திலும் குறிப்பு இல்லை. யாருமே நம்பவும் மறுக்கின்றனர். ஏனெனில் இருவருக்கும் பொதுவாக எதுவுமே இல்லாத போது சாத்தியமே இல்லை என்கிற முடிவு ஏற்பட்டுவிடுகிறது.

     பின்னாளில் கதைசொல்லி அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டபோதும் அவள் பிடிவாதமாக காரணத்தை கூற மறுத்துவிடுகிறாள்.

     சந்தியாகோவை கொல்ல விகாரியோவின் சகோதரர்கள் திட்டமிடுகின்றனர். அதுதான் தங்களது கவுரவதிற்க்கான செயல் என்றும் கருதுகிறார்கள். கிட்டதட்ட காலையிலில் இருந்து தாங்கள் பார்க்கும் அனைவரிடமும் கொல்ல போவதை சொல்லவும் செய்கிறார்கள்.

     மிகவும் நேர்மையானவர்களான சகோதரர்கள் சொல்லும் போது யாரும் நம்பவில்லை. ஆனாலும் ஏதோ நடக்க போகிறது என முன் அறிகின்றனர். சகோதரர்களே தங்களை யாராவது தடுத்திருந்தால் கொலை செய்திருக்க மாட்டார்களோ என எண்ணுமளவிற்கு தான் சந்தியாகோவின் வீட்டின் வாசல் அருகே காத்திருக்கின்றனர்.

     எல்லாவற்றையும் மீறி எல்லோரின் முயற்சியையும் மீறி நடப்பது நடந்தே தீரும் என்கிற கோட்டின் மீது காலம் நிகழ்வுகளை அடுக்குகிறது. முன் கதவில் கீறல்கள் தெரியுமளவிற்கு வெட்டுப்பட்ட சந்தியாகோ தன் வீட்டின் பின் வாசல் வழியாக சமையறையில் சென்று விழுந்து சாகிறான்.

   
  கொலையின் நிகழ்வுகளானது டாமினோ விளையாட்டை போல ஒவ்வொரு சீட்டும் அடுத்த இடைவெளியில் சீராக அடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றை உருவினாலும் முழு விளைவினையும் நிறுத்தி விட முடியும். ஆனால் அதற்கான வாய்ப்புகளே இல்லாத அளவிற்கு கதையை கட்டியிருப்பது புனைவின் அபாரத்தை காட்டுகிறது. விதி என்பதும் அதுவே.

     கூர்மையான வருணனை, தெளிவான நடை, சுவாரசியம் கூட்டும் வகையில் நிகழ்வுகளைத் தொகுத்தளித்திருப்பது, வாசகனுக்கான அறிந்துக்கொள்ளல் இடைவெளியை அளித்திருப்பது, தவறவிட்ட வரிகளை ஒன்றோடொன்று இணைத்திருப்பது என நாவலின் பக்கங்களில் உறைந்திருக்கும் உத்திகள் புதிய அனுபவத்தை அளிக்கின்றன.

     அனால் இதுவொரு மர்ம நாவலாகவோ, துப்பறியும் நாவலாகவோ அமைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் இருந்தபோதும் நினைவுகளுக்கான தொடர்புகளை அளிக்கும் இலக்கிய பதிவாக நாவல் உருப்பெறுகிறது.  

      ரோஜெர் மார்டின் டு கார்ட் தபால்காரன் நினைவில் வந்து போகிறான் நகர் மாந்தர்கள் குறித்த வர்ணிப்பில்.

     எதிர்பார்ப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் பிந்தைய விளைவுகளுக்குமான இடைவெளிகளின் பலவித பரிமாணங்களை உள்ளடக்கிய கதை சொல்லலே முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம். 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...