எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இறுதி யாத்திரை நாவலை கோவையிலிருந்து திரும்பி கொண்டிருந்த பயணத்தின் போது வாசித்தேன். பாதி நாவல் மட்டுமே வாசிக்க முடிந்தது. வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள் காலையில் அதனை முடித்து விட்டு அடுத்து வாசிப்போம் என்ற நினைப்பில் படிக்கத் தொடங்கினேன். சற்று முன் தான் வாசித்து முடித்தேன். ஆனால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. எப்போதுமே ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஏனென்றே தெரியாத ஒரு அமைதி வந்து மனதில் அமர்ந்து கொள்ளும். அது நீடிக்கும் நேரம் அந்த புத்தகத்தின் செறிவைப் பொருத்தது.
எம்.டி.வி ஏன் ஒரு மாஸ்டர் என்பதை இந்த நாவலின் வழியாக உணர முடிந்தது. ஆரம்ப அத்தியாயங்களில் யார் எதை சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகித்து கொள்ள சிறிது நேரம் எடுக்கிறது. ஒன்றிரண்டு முறை பின்னால் சென்று வாசிக்க நேரிடும். ஆனால் அது கொஞ்ச நேரத்திற்கு தான். நாவலின் பேட்டர்ன் பிடிபட்டவுடன் இலகுவான வாசிப்புக்கு நாம் நகரத் தொடங்கிவிடுவோம்.
வரிகளுக்கிடையேயான சொல்லப்படாத அர்த்தங்கள் தான் நாவலின் எடையைத் தீர்மானிக்கிறது. அத்தனை ஆழமாக அதுவும் வெளிப்படையாக சொல்லாமலே வாசகருக்கு ஒன்றை புரிய வைக்க முடியும் என்பதெல்லாம் மாஸ்டர்களினால் மட்டுமே சாத்தியம்.
அப்பாவின் மரணத்திற்கு நாட்டின் வெவ்வேறு திசையில் இருந்து வந்து சேரும் சகோதரர்கள். அவர்களுக்கிடையேயான உறவு. அப்பாவிற்கும் அவர்களுக்குமான தருணங்கள். அப்பா சுயபோகங்களை விரும்பக்கூடியவர். மகன்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்கிற கேள்வி வரும் போது வெறுமையே எஞ்சுகிறது. ஆனால் மகன்கள் அவரை பார்த்து கொள்கிறார்கள். அவருக்கு வருவாய் ஈட்ட போன இடத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது. கணக்கில்லாத அளவில் உறவுகள் இருக்கின்றன. அப்பாவோடு உணர்வு ரீதியா துண்டாக இருப்பவர்கள் ஊர்ப்பேச்சுக்காக ஒன்று சேர்க்கிறார்கள்.
இதே நேரத்தில் வாசித்த யாவரும் இணைய இதழில் வெளிவந்த வைரவன் அண்ணாவின் 'சுருள்' கதையும் நினைவுக்கு வருகிறது. கோடி அப்பாக்கள் இருப்பார்களெனில் கோடி கதைகளும் இருக்கத் தானே செய்யும்.
சிற்றலைகள் ஒன்றாக உருவாக்கி ஒரு நேரத்தில் ஒன்றோன்று சேர்ந்து கரையில் சில்லு சில்லாக உடைவது போல தான் இந்த நாவலும்.
தனிப்பட்ட முறையில் என்னோடு தொடர்பு படுத்தி பார்க்கக் கூடிய சில தருணங்கள் இதில் உண்டு. எம்.டி.வி.யின் நாவல்களை எல்லாம் இனி வாசிக்க வேண்டும்.
தமிழில்: கே.வி.ஷைலஜா
வெளியீடு: வம்சி பதிப்பகம்
கருத்துகள்
கருத்துரையிடுக