மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும்.
ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான்.
ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம்.
பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக
யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது.
கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை
பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும்
இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள்.
“இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும்
கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள்.
சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல
ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி
வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு கையில் அரிக்கேன் விளக்குடன்
கண்ணப்பன் முகப்பைத் தாண்டி வீட்டின் வாசலில் இருந்து இறங்கி வேகமாக நடக்க தொடங்கினான்.
வீதியெங்கும் தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சலசலன்னு கால்களை ஒன்று மாற்றி ஒன்று
உயர்த்தி உயர்த்தி வைத்து தெருவின் கிழக்கு பக்கத்தை வந்தடைந்து இருந்தான். சகுந்தலா
ஆயா வீட்டின் பின்கட்டு வாசல் அது.
கதவைத்
தட்டினான். வள்ளி அக்கா தான் கதவைத் திறந்தாள். “அக்கா அம்மாவுக்கு வலி வந்துருச்சு”
என சொல்லி முடிப்பதற்குள், அவள் உட்புறம் பார்த்து, “ஏங்க...” என சத்தம் போட்டாள்.
“என்னடி” என குரல் கேட்டவுடனே பதில் சொன்னாள், “சீதா ஆச்சிக்கு வலி வந்துருச்சாம்.”
சட்டை பட்டன்களை விரைந்து மாட்டிக்கிட்டு அண்ணன் சைக்கிளை தள்ளியவாறே வீட்டில் இருந்து
வெளியே வந்தார். சைக்கிளை வாசலின் நிலைப் படி இடிக்காது இருக்க ஒரு கையால் அதன் கம்பியைப்
பிடித்து தூக்கி வெளியே போட்டார். “வாங்க தம்பி” என பின் கேரியரில் கண்ணப்பனை ஏற்றியவாறு
மண் சாலையில் சரெர் என சைக்கிள் விரைந்தது. மழை கண்ணின் மேல் படாது இருக்க ஒரு கையை
நெற்றியில் வைத்தவாறு சைக்கிளை மிதித்தார் ஒத்தையண்ணன். ஏன் இந்த பேர் என தெரியாது
கண்ணப்பன் யோசித்தது உண்டு. அவரது ஒரு கண் வெள்ளி நிறத்தில் இருக்கும். நமக்கு தெரிவது
போலவே அவருக்கும் பார்வை தெரியுமா. தெரியவில்லை.
வாசலில் செந்தில் நின்றான். “டே... செந்தீ. சுப்பு செட்டியார் வீட்டுல
கார் இருகானு பாரு. மழை வேற விடாது பெஞ்சுட்டு இருக்கு. வண்டி பூட்டுறதுலா ஆகாத காரியம்”
ஒத்தை அண்ணன் சைக்கிளை படியின் பக்கவாட்டில் சாய்த்து வைத்து விட்டு பேசியவாறே உள்ளே
போனார். முகப்பில் நின்றுக் கொண்டு வளவைப் பார்த்தவாறே சத்தம் கொடுத்தார். “செந்தில
சுப்பு செட்டியார் வீட்டுல கார் நிக்குதான்னு பார்க்க சொல்லி இருக்கேன்”
“சீக்கிரம் தம்பி. வலி வந்துருச்சு. கார் கிடைக்கலைனா, பெரிய ஆச்சி
வீட்டுக்கு போயி அவுகள யாராவது கூட்டிட்டு வாங்க ப்பா”
பெரிய ஆச்சி வீடு இங்கிருந்து பத்து நிமிஷம் நடந்து போனா வந்துடும்.
அநேகமா இந்த ஊருல பிறந்த முக்காவாசி பேருக்கு ஆச்சி தான் பிரசவம் பார்த்து இருக்கும்.
இன்னென்ன ஆளுகன்னு கிடையாது, மொத்த ஊருக்கும் அறிவிக்கப்படாத மருத்துவச்சி பெரிய ஆச்சி
தான். பெரிய ஆச்சி வீட்டுக்காரர் பர்மாவுல இருந்ததாகவும் திரும்பி வரும் போது வழிலேயே
தொலைஞ்சு போனதாகவும் தாக்கல். ஆனா அதை பத்தி பெரிய ஆச்சி யார் கிட்டவும் பேசியோ புலம்பியோ
யாரும் பார்த்தது இல்ல. ஒரேயொரு பையன். அவனையும் பிள்ளை இல்லாத அவங்க அக்கா எடுத்து
வளர்த்தது. ஆச்சி மெட்ராஸ்ல படிச்சது. ஊருல யாருக்கு எந்த லெட்டர் வந்தாலும் அவங்க
முதல்ல பார்க்க வர்றது ஆச்சியைத் தான். இப்போ வயசான பிறகு கண்ணு மங்கலா தெரியுது. மகமாயி
அக்கா தான் சோறு வடிச்சு கொடுத்துட்டு இருக்கு. ஆச்சியோட மகன் வெளிநாட்டுல இருந்து
பணம் மட்டும் அனுப்பிட்டு இருக்காரு.
இந்த மழையில பெரிய ஆச்சிய இவ்வளவு தொலைக்கு நடக்க வச்சு கூட்டிட்டு
வர்றது சிரமம்னு ஒத்தை அண்ணனுக்கு தோன்றியது. செந்தில் தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது.
கார் கிடைக்கவில்லை என்பது நடையிலேயே தெரிந்தது.
இதன் பிறகும் யோசிச்சுட்டு இருக்க கூடாதுன்னு ஒத்தை செந்திலை இழுத்துட்டு
இரண்டு நடையில் சாலையை அடைந்து விட்டான். சாலையில் ஒரு வண்டி கூட போக வர நடமாட்டம்
இல்லை.
மழை சத்தமும் இருட்டும் நிரம்பி இருந்த சூழலைக் கிழித்துக் கொண்டு
மஞ்சள் நிற ஒளி தூரத்தில் தெரிந்தது. “செந்தீ மறை டா”.
கொஞ்ச நேரத்தில் சீதாவையும் சாந்தியையும் முன்புறம் ஏற்றிக் கொண்டு,
பின்புறம் தார்பாயை விரித்து பிடித்துக் கொண்டு செந்தி, ஒத்தை, கண்ணப்பன், கிளினரைத்
தாங்கிக் கொண்டு அருகே இருக்கும் ஆஸ்பத்திரி நோக்கி லாரி சென்றது.
“என்னம்மா இந்நேரம் கொண்டு வந்து இருக்கீங்க...” செவிலியம்மா அலுப்போடு
பூட்டி இருந்த கேட்டை உட்புறம் இருந்து திறந்து இவர்களை உள்ளே வர அனுமதித்தாள். “வலி
வந்துருச்சு தாயி. டாக்டர் இருந்தா பார்க்க சொல்லுங்கம்மா” என கெஞ்சியவாறு சாந்தி செவிலியரைப்
பின் தொடர்ந்தாள். “டாக்டர் இப்போ வர மாட்டாங்க. இங்க கொண்டாந்து போடுங்கப்பா” என சீதாவைத்
தாங்கி இருந்த லக்ஷ்மிக்கு கையை உயர்த்தி கட்டளையிட்டாள். “இன்னும் தண்ணீ குடம் உடையல.
புள்ள பெக்குறவ தான் வீக்கா இருக்கா. இது எத்தனாவது பிரசவம்” என கேட்டுக் கொண்டே ஊசியைப்
போட்டாள்.
செந்தியும் ஒத்தையும் லாரி டிரைவருடன் தீப்பெட்டி தேடிட்டு இருந்தாங்க.
போகிற லாரியை எல்லாம் மறித்து தீப்பெட்டி கேட்டார்கள். கடைசியாய் தீப்பெட்டி கிடைத்ததும்
பீடி பத்த வச்சிட்டு ஓரமா பாரத்தை இறக்கின பிறகு தான் பேசத் தொடங்கினார்கள்.
“ஏன்னே, இந்த ஆச்சியோட செட்டியார் இங்க இல்லையா...”
“அத ஏன்டா கேக்குற. அந்த அப்பச்சி நல்ல மனுசன். ஊரே பஞ்சத்துல கிடந்தப்போ
தினமும் இருபது முப்பது பேருக்கு வடிச்சு போட்ட மகராசரு. எந்நேரமும் எதையாவது எழுதிட்டும்
படிச்சுட்டும் இருப்பாரு. எங்கிருந்தோ ஆளுக இவரைத் தேடி வருவாங்க. எப்பவும் கலகலன்னு
இருக்கும் வீடு. அவரு நிறைய படிச்சதாலேயோ என்னமோ கொஞ்ச வயசுலேயே மூளை குழம்பிடுச்சு.
சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிட்டு இருந்தாரு. அப்போ தான் மகராசி இரண்டாவது புள்ளைக்கு
தலை குளிச்சு இருந்தா. வீட்டுல ஆரும் இல்லாத நாளுல கிணத்துல இருந்து பிணமா தான் தூக்குனாங்க
அவரை. அப்போவே ஆச்சி உடைஞ்சு போயிட்டாக.” இரண்டு மாசமா தான் இந்த ஊருல இருக்கிற செந்திக்கு
ஒத்தை எல்லாத்தையும் சொல்லிக் கொண்டிருந்தான்.
கண்ணப்பனை எழுப்பும் போது அதிகாலை மூணு இருக்கும். “உனக்கு தங்கச்சி
பாப்பா தான்டா பிறந்துருக்கு” லக்ஷ்மியக்காவை மர பெஞ்சில் படுத்தவாறே பார்த்துட்டு
இருந்தான்.”எந்திருச்சு வா” என அவள் சொல்வதற்காக காத்திருந்தவன் போல் எழுந்து வேகமா
அம்மாவை நோக்கி சென்ற போது தான் சாந்தியின் அழுகுரல் அவனக்கு கேட்டது.
அப்பாவை வைத்திருந்த அதே பட்டாலையில் அம்மாவும் கிடத்தப்பட்டிருப்பதைப்
பார்த்தவாறே தூணில் சாய்ந்துக் கொண்டு நின்றான் கண்ணப்பன். பங்காளிகள் எல்லாம் வந்து
நிற்க பந்தக்கால் ஊன்றப்பட்டது. களிமண் உருண்டைகள் நான்கும் தாங்கி நிற்க நடுவே ஒரு
வெள்ளை துணியில் அம்மா கிடத்தப்பட்டாள்.
அப்பாவிற்கு முடி இறக்கியது போலவே இம்முறையும் முடி இறக்க சொல்லுவார்களா
என யோசித்துக் கொண்டிருந்தான் கண்ணப்பன்.
தங்கச்சி பாப்பாவுக்கு என்ன
பேர் வைப்பாங்க. தெரியல. முதல்ல பேர் வைப்பாங்களா. அதுவும் தெரியல. அழுகை வருவது போல
தான் இருந்தது.
அப்பாவுக்காக அழுத போது அம்மா பக்கத்துல கூப்பிட்டு சொன்னது நினைவுக்கு
வந்தது, “நான் இருக்கேன்ல. அழுக கூடாது” தங்கச்சி பாப்பாவிடம் தான் இதை
சொல்ல வேண்டும்
என விருப்பப்பட்டான் கண்ணப்பன். அவளுக்கு புரியுமா என்ற சந்தேகம் வேறு வந்து நின்றது.
***
டிசம்பர் 09, 2019
பிரபாகரன் சண்முகநாதன்
அருமையான கதை ...வாழ்த்துக்கள் அண்ணா..♥️👍
பதிலளிநீக்கு