முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது.

Orphan Train By Holly J. Kroening

     உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நான் அப்படி இயக்க விரும்பவில்லை. சரி, இப்படி வைத்துக் கொள்வோமோ. என் இருக்கைக்கு எதிரில் காலியான இருக்கையை நிரப்ப ஒரு குழந்தையும் அவள் தாயும் வருவதாக. இல்லை, வேண்டாம். அம்மாக்கள் எப்போதும் தனியாக பயணம் மேற்கொள்வதில்லை. பின்னாடியே கனமான பைகளைச் சுமந்துக் கொண்டு வரும் அவரது கணவர், என் அருகில் இருக்கும் இடத்தை நிரப்பிக் கொள்வதோடு மட்டுமில்லாமல் எனது கதை எழுதும் மனநிலையையும் சிதைத்துவிடுவார் புடலாங்காய் அரசியல் பேசுவதன் மூலமாக. ஒரு கிழவியும் அவரது பேரனும்- பேரனுக்கு வேடிக்கை அலுத்துவிட்டால் தூக்கம் வந்துவிடும். பாட்டி கால் நீட்டிக்கொள்வாள். பேரன் துயில்கொள்வான். உலர்ந்திருக்கும் அவரது முகம் முடிவற்ற சோகத்தை என்னுள் ஆழ்த்திவிடும். பிறகு நானும் முங்க வேண்டியதுதான் துக்கக் கடலில்.

     கண்ணாடியணிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர்- காப்பி வாங்கி குடிப்பார். தந்தியோ ஹிந்துவோ என் முன் விரிக்கப்படும். அல்லது நீண்ட போனில் தேடி தேடி தமிழ் தட்டச்சு மூலம் தனது அலுவலக கட்செவி அஞ்சல் குழுவில் மேனேஜர் பகிர்ந்திருக்கும் அரதபழைய காமெடிக்கு ‘அருமை’ கமெண்ட் இட்டுக் கொண்டிருப்பார். எனக்கு வேற ஒன்னும் தோன்றாது அவரிடம் பேப்பர் கேட்கலாமா வேண்டாமா என்பதைத் தவிர. ஒரு இளைஞன் வருவதாக வைத்துக்கொள்வோமா. வேணாம். அவனது தோழியோடு மட்டும் அளாவல் செய்வான். அல்லது யூடூபில் முகம் புதைத்திருப்பான்.

     ஒரு முடிவுக்கு வந்தால் தான் இந்தக் கதையைத் தொடர முடியும். முதல் நிறுத்தம் வரும் வரை உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற நான் உடன்படுகிறேன். ஒரு அழகான யுவதி வருகிறாள். வர்ணனை இல்லாத பெண் அறிமுகம், கார சட்னி இல்லாமல் குழிப் பணியாரம் சாப்பிடுவது போல் ஆகிவிடும். ம்... தொடங்கட்டும். மெல்ல நடை பயிலும் தோரணையில் முன்னங்கால் நகர, பின்னங்காலை உரசாதவாறு வலது கையால் தனது ரோலர் பொருந்திய சூட் கேசையும், இடது தோளில் ஆரம்பித்து வலது இடுப்பில் முடிவுறும் ஸ்லிங் பேக்கையும் தாங்கியவாறு இடது உள்ளங்கையில் பற்றியிருந்த கையடக்க பேசியை நோக்கியவாறு பார்வையால் இருக்கை எண்களை கடந்துக் கொண்டே என் பகுதிக்கு வருகிறாள். எனக்கு எதிரில் உள்ள சாளர இருக்கையின் எண்ணை வாசித்துவிட்டு உறுதிப்படுத்திய அவளது கண்கள் என்னைக் கவனிக்கவில்லை. தன் ரோலரின் கைப்பிடியை உள்ளடங்க செய்து விட்டு அப்பெட்டியை இருக்கைக்கு அடியில் புதைத்துவிட்டாள். அவளது பின்பகுதி இருக்கையில் அமருகையில் என் மடி அங்கே இருந்திருக்க கூடாதா... நீல நிறத்தில் நீண்டிருந்த டாப்சுக்கு மஞ்சள் குளித்திருந்த லெக்கின்ஸ் பொருத்தமான உடை தானே. அமர்ந்தவள் நீண்டிருந்த தன் கையில் பிடித்திருந்த சிறையில் கண்களை நிலைகுத்த செய்தாள். ஸ்லிங் பேக் அவளது மடியில் தன் இடத்தை உறுதி செய்துக் கொண்டது. அதிலிந்து வெளியே வந்த இரு தலை நாகத்தின் இரண்டு தலையையும் தனியே பிரித்து காதிற்கு ஒன்றாக பொருத்திக்கொண்டாள். அனிருத்தோ ஜீவியோ ரஹ்மானோ ஏன், ஆதியே கூட காதல் கூவிக் கொண்டிருக்கலாம்.

     இப்படியே நான்கு பக்கத்துக்கு இழுத்திடலாம் தான். ஆனா சுவாரசியம் வேணுமே. இப்ப கொஞ்சம் பின்னாடி போவோம். அவளது பின்பகுதி இருக்கையில் அமருகையில் என் மடி அங்கே இருந்திருக்க கூடாதா... அமர்ந்தவள் நீண்டிருந்த தன் கையில் பிடித்திருந்த சிறையில் கண்களை நிலைகுத்த செய்தாள். திடீரென மேல் நோக்கியவள் என்னைப் பார்த்து புரிபடாத சிரிப்பினைச் சிந்திவிட்டு முகத்தைச்  சாளரம் பார்த்து வைத்துக் கொண்டாள். அடுத்து என்ன ட்விஸ்ட் வைக்கலாம்...

     எதாவது ஒன்று பேசணும்னு தோன்றிக் கொண்டே இருந்தது. என்ன பேசுவது எவ்விதமான யோசனையும் வரவில்லை. கூப்பிட்டுவிட்டு உடனே என்ன தோணுதோ அடிச்சுவிடலாமா... ம்கூம். மொபைல் நம்பர் கேட்டு அவ முறைச்சுட்டா, ஊரு போய் சேர்வது வரை இந்தப் பாழாப் போன கம்பிய பார்க்க வேண்டியாகிவிடும். நல்லவேளை. என் முன்னோர்கள் காட்டிய வழி கிடைத்தது. யூ ஆர் கிரேட் காய்ஸ்.

     ‘ஹ்ஹ்ஹலோ...’

எவன்டா அவன் பிரேக் அடிச்சது. வார்த்தை காற்றில் விழுவதற்கு பதிலா வழுக்கி என் வாய்க்குள்ளே மீண்டும் விழுந்துருச்சு. ஓ, அடுத்த ஸ்டேஷன் வந்துடுச்சா... பொதுவா நான் கால நேரமெல்லாம் பார்க்கிறது கிடையாது. ஆனா முத முறையா பார்க்க வேண்டியதாகிடுச்சு. எதனாலயா? அதான் எதிரில் உர்கார்ந்து இருக்கிறதே... வெண்ணிற பைங்கிளி.

     ரயில் மீண்டும் தடதடக்கும் வரை மௌனம். இப்பவாவது சொல்றா... மனம் எழுத்துகளைக் கோர்க்க தொடங்கையில், எங்கிருந்தோ ஒலித்த குரல் என் பெயரை உச்சரிப்பது போல் தோன்றியது. அட... சீ. ஏ, இன்டியூஷன் உன்ன கொல்லப் போறேன்...

     மீண்டும் அதே குரல். தலையைச் சிறிது வலமாகத் திருப்பினேன். பார்த்திபன் அங்கிள் தோளில் ஆபீஸ் பை ஒன்றும், கையில் கட்டப்பை ஒன்றுமாக என்னைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னே என்னை நோக்கி நீண்டிருந்தது அவரது பெருத்த வயிறு. அதை வச்சுத்தான் அவர் யாருனே உறுதி செஞ்சேன். அப்பாவோட நண்பர். இந்த விதி இருக்குதே.

     “அங்கிள்...”

அவளிடம் கேக்கலாம்னு யோசிச்ச கேள்வி தானவே வெளிய குதிடுச்சு.

     “டைம்... என்ன அங்கிள்”

என் பக்கத்து சீட்டில் அமர்ந்தவர், ‘ஏண்டா எதிர்பார்க்காம இரண்டு பேரும் சந்திருச்சுக்கோம். பார்த்தவுடனே முதல டைம் என்னனா கேட்ப’ அலுத்துக் கொண்டவர், பேசத் தொடங்கினார், பேசுனார், பேசுனார் நிறுத்தமே இல்லாத சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்-ஏ தோற்றுவிடும் அளவிற்குப் பேசினார். இறுதியாய் ஒரு முடிவு வந்தது, அவருக்குக் கொட்டாவி வந்த பின்னால். அப்போ ஒரு நல்ல விஷயம் செய்தார்.

     “தம்பி... உன் சீட் எது...”

     “36 லோயர் அங்கிள்...”

     “நல்லதா போச்சு. எனக்கு அப்பர் பெர்த். மூட்டு வலி. நீ மேல போய் படுத்துக்கோ கண்ணா.”

     அவரது மூட்டுவலி என் தோழிய பார்க்க ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துருச்சு. என்னது தோழியா... அகன்ற உங்கள் வாயை மூடுங்கள். இது மேகி தலைமுறை. இரண்டு நிமிசத்துல நட்பு மலந்துரும். ஒரு நாள்ல காதல் துளிர்விடும். இரண்டாவது நாள்ல கல்யாணம் நடக்கும். மூணாவது நாள்ல குழந்தை கூட பிறக்கலாம். யார்ய்யா அது காரி துப்புறது. நோ....

     தோழி கையில் பன்னாட்டு மொழியாம் ஆங்கில மொழி நாவல். அப்போதிருந்து நான் ஆங்கில மொழியை தாய் மொழியாக ஏற்றுக் கொண்டேன். இப்போது ஆங்கிலத்தில் ஒரு வசனம் யோசிக்கணும். கண்டுபுடிச்சேன்.

     “எக்ஸ்யூஸ் மீ...”

இப்ப யாருங்க விளக்க அணைச்சது. கீழே இருந்து மேலே வந்தது ஒரு வாய்ஸ்.

     “குட் நைட் தம்பி”

நடுவுல இந்த அங்கிள் என்ட்ரிய கட் பண்ணி இருந்திருக்கனுமோ. தப்பு பண்ணிட்டோமே. வீடியோவா இருந்த கூட பரவாயில்ல எடிட் பண்ணிடலாம். இது கதையா போச்சே.

     இருட்டுல அவ தூங்குற அழக கற்பனை பண்ணிட்டே காலத்த அதோட வேலைய பார்க்க அனுமதிச்சேன். அது போய் சூரியன இழுத்துட்டு வந்துருச்சு. இந்த உலகம் காலைனு அதுக்கு ஒரு பேர வச்சிடுச்சு.

     எதிர் இருக்கையில் பார்த்தேன். என் காதலி கிளம்பி போயிருந்தாள். எப்ப எழுந்து எங்க இறங்கியிருப்பா. காலங்காத்தால இவ்வளவு யோசிக்க கூடாதே. அவள் துயில் கொண்டிருந்த படுக்கை மீது ஒரு ஹேர்பின் கிடந்தது. கையை எட்டி அதை எடுத்தேன். என் சென்சார் தப்பாக புரிந்து கொண்டு இரவில் அவளிடம் சொல்ல வேண்டிய வசனத்தை இப்போது ஒலிபரப்பியது.

     “பை த வே, யூ லுக் சோ கார்ஜியஸ்.

என் விதி. என்ன செய்ய. ஆசான் வடிவேலு சொல்வது போல 'வட போச்சே'னு முகத்தை வச்சுட்டு கீழ இறங்குனேன். யாருமே இல்லாத இருக்கைகள் என்னை வெறித்தன. வெளியே வந்து பார்க்கிறேன். ஜேலேபிய பிச்சு போட்டு ரயில்வே அறிவிப்புகள் சுவத்துல சிதறி கிடக்கின்றன.

     நிறுத்துங்க, இது என் கதை தான். நான் தானே என்ன நடக்கனும்னு முடிவு செய்யணும். எனக்குள் உறங்கிட்டு இருக்கிற குரங்கு கதைல கூட நல்லது நடக்க விட மாட்டேங்குது. இருக்கிறதெல்லாம் அழிச்சிட்டு திரும்ப முதலில் இருந்து ஆரம்பிப்போம். ஓகே, வா...

     அவளது பின்பகுதி இருக்கையில் அமருகையில் என் மடி அங்கே இருந்திருக்க கூடாதா... அமர்ந்தவள் நீண்டிருந்த தன் கையில் பிடித்திருந்த சிறையில் கண்களை நிலைகுத்த செய்தாள். திடீரென...

-பிரபாகரன் சண்முகநாதன் 

(செப்டெம்பர் 2017)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து