ஒவ்வொரு படைப்புக்கும் உயிர் உள்ளது என நம்புகிறவன் நான். எழுத்தாளர் திட்டமிட்டோ திட்டமிடாமலோ அந்த உயிருக்கான உருவத்தை அளித்துவிடுகிறார். அந்த உயிரை நீங்கள் அணுகும் போது உங்கள் தன்மைக்கேற்ப உங்களோடு அது உரையாடலை நிகழ்த்தும். நீங்கள் அதற்கு ஆட்படலாம் அல்லது தாண்டிச் செல்ல முயற்சிக்கலாம். அதனோடு மூர்க்கமாகச் சண்டை நிகழ்த்தலாம். ஆனால் ஒரு போதும் மறுதலிக்க முடியாது.
பேய்ச்சியின் உடனான உரையாடல் என்னை அச்சப்படுத்தியது. உடைந்து அழுக வைத்தது. மருண்டு சுருங்கி, இரவுகளில் நாக்கைத் துருத்தி யாரையாவது உடன் அழைத்துச் செல்ல வைத்தது. அப்போயின் வடிவில் என்னையே பார்க்க செய்தது. பேய்ச்சியின் பேராற்றல் முன்பு மண்டியிட்டுக் கதற வைத்து தண்ணென்ற அருவியாக தலை மேல் கொட்டித் தீர்த்தது.
எந்த புதிய களத்திலும் வாசிக்கத் தொடங்கும்போது ஏற்படும் அறிமுக சிக்கலைத் தவிர வாசித்து முடிக்கும் வரை வேறு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை. மொழியின் சரளம் அவ்வாறானது.
இருவேறு காலகட்டங்களிடையே பயணிக்கும் கதை. இரண்டிலும் பொதுவான மனிதர்கள். ஒவ்வொருவருக்குமான பின்கதை, அவர்களின் இன்றைக்கான இடத்தை அடைய அவர்கள் கடந்து வந்த பாதை, அல்லது முன்கதையில் தொலைந்து போனவர்களின் வாழ்க்கை என எதிர்பார்ப்புகளுக்கும் திருப்பங்களுக்கும் குறைவில்லாது நகரும் போக்கு சுவாரசியமானது.
பழகாத களம் எனினும் எந்தவிதமான அன்னியத்தன்மையும் இல்லாத அளவிற்கு கதை நம்மோடு உரையாடுகிறது. பாவங்கள் என எதை எல்லாம் சொல்ல முடியும். எந்த அடிப்படையில் அவை பாவங்கள் ஆகின்றன. மனிதர்களின் உறவு எதுவரை, எந்தக் காரணி உங்களுக்கும் எனக்குமான உறவை வரையறுக்கிறது. புறச் சூழலின் பங்கு தான் நம்மைச் செலுத்துகிறதா அல்லது நம்மோடே உலாவும் மனிதர்களால் அறிய முடியாத ஆற்றல் வழி நடத்துகிறதா.
வாழ்வின் கேள்விகளுக்கே பதில் இல்லாத போது நாவலின் கேள்விகளுக்கு மட்டும் எங்கிருந்து பதில் கிடைக்கும். பதில் கிடைக்காத கேள்விகள் எஞ்சும் சூழலில் நாம் கண்டடையும் பதில் அறிவுக்குப் புறம்பானதாக கூட இருக்கலாம். ஆனால் மனதிற்கு அன்னியப்படாதது. பேய்ச்சியுடனான உரையாடலும் அப்படியானது தான்.
பேய்ச்சி (நாவல்)
ஆசிரியர்: ம.நவீன்
வெளீயிடு: வல்லினம் & யாவரும்
பாதிப்பு: 2019
கருத்துகள்
கருத்துரையிடுக