முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதர்களின் பேராசைக்கு இரையாகும் இயற்கை!

(ஓநாய் குலச்சின்னம்- ஜியாங் ரோங் - தமிழில்: சி.மோகன் - நூல் வாசிப்பு அனுபவம்)
Wolf Totem - Magnet - Simon Haiduk Art
Courtesy: simonhaiduk
“ஓநாய்கள் மனிதர்கள் அளவுக்குத் தீயவை அல்ல”
நாவலில் இடம்பெறும் இந்த ஒற்றை வரி தான் ஒட்டுமொத்த கதையின் அடித்தளம். ஓநாய்களை சொர்க்கத்தின் தூதுவர்களாக வழிபடும் மங்கோலிய மக்களிடையே பணியாற்ற வரும் ஹேன் சீன மாணவர்களான ஜென் சென் மற்றும் யாங் கீ ஒரு ஓநாய் குட்டி வளர்க்க முயற்சி செய்யும் கதை தான் ஓநாய்குலச்சின்னம். மேய்ச்சல் நிலத்தின் அரசனான ஓநாய்கள் எவ்வாறு ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்பட்டன, மனிதர்களின் பேராசை, வளர்ச்சி, அதிகாரம் போன்றவற்றையும் இதன் காரணமாக சிதைந்த இயற்கையையும் கதை பேசுகிறது.
அடிப்படையில் இந்த நூல் ஒரு தன் வரலாற்று நூல் வகையை சேரும். சீனாவில் ஏற்பட்ட கலாச்சார புரட்சியின் விளைவாக கிழக்கு உள்-மங்கோலியாவிற்கு அனுப்படும் ஜியாங் ரோங்-இன் வாழ்கை அனுபவங்களே இந்த நாவல்.

ஜென் சென் மங்கோலியர்கள் வழிபடும் ஓநாய்களை நேசிக்க தொடங்குகிறான். ஓநாய்களைப் பார்த்து பயப்படும் அவற்றை தீய சக்தியின் உருவமாக பார்க்கும் சீன மக்களிடையே இருந்து அவன் வந்திருப்பதால் தீயவற்றை செய்யும் ஓநாய்களை எப்படி இவர்களால் நேசிக்க முடிகிறது என்கிற கேள்வியின் ஆர்வத்தில் அவற்றை குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள விரும்புகிறான்.

மங்கோலிய இனக்குழுவின் தலைவரான பில்ஜி அவனுக்கு வழிகாட்டுகிறார். ஓநாய்களை வணங்கும் கலாசாரத்தை நம்பும் கடைசி பிரதிநிதி அவர். ஓநாய்களிடம் இருந்து அந்த மக்கள் பெற்ற போர் வியூகம், ஆற்றல், தீரம், நுண்ணறிவு பற்றி பல்வேறு சூழல்களில் ஜென் அவதானிக்கிறான். 
மேய்ச்சல் நிலம் பெரிய உயிர். மனிதனும் ஓநாயும் மற்ற எல்லாமும் கூட சிறிய உயிர்கள் தான் பில்ஜி அவனுக்கு போதிக்கிறார். ஒரு கிழட்டு ஓநாய் போல தோன்றும் அவருடன் ஜென் செல்லும் வேட்டைகள் அவனுக்கு அந்த நிலத்தின் பல்வேறு சூட்சுமங்களை கற்கும் வாய்ப்பாக அமைகிறது. நாடோடி மக்களான அவர்கள் ஓநாய்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் தங்களுடைய கால்நடைகளின் பாதுகாப்பிற்காக. ஓநாய்கள் மேய்ச்சல் நிலத்தைப் பாதிக்கும் வயல் எலிகள், மர்மோட்டுகள், மான்கள், குதிரைகள் என மற்ற விலங்குகளை தங்கள் உணவுக்காக வேட்டையாடுவதன் மூலம் மேய்ச்சல் நிலம் பாதிக்கப்படாது காக்கின்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் மங்கோலிய மக்கள் அதனை ஆன்ம அளவில் வணங்கவும் பாதுகாப்புக்காக சிலவற்றை கொள்ளும் வேட்டைகளையும் மேற்கொள்கின்றனர்.
Shadow Gun Images, Stock Photos & Vectors | Shutterstock
Illustration
இந்த நடைமுறை இந்நிலத்தைப் பற்றி அறியாதவர்கள் அங்கு வரும் போது சீர்குலைக்கிறது. அவர்கள் ஓநாய்களால் தன அந்த நிலம் பாழ்படாது செழிப்போடு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து தங்கள் பேராசைக்காக அதிக கால்நடைகளை வளர்க்க விருப்பப்பட்டு வெடி மருந்து, விஷம் என அறமற்ற வழிகளில் ஓநாய்களைக் கொல்லுகின்றனர்.
இதற்கிடையில் ஓநாயை நெருக்கமாக அவதானிக்க விருப்பம் கொண்டு ஒரு ஓநாய்க்குட்டியை ஜென்னும் அவன் நண்பனான யாங் கீ-உம் வளர்கின்றனர். நினைவில் காடுள்ள மிருகம் என்பதை போல ஓநாய் தன்னுடைய பிறப்பின் நோக்கமான சுதந்திரத்தையும் பழக மறுக்கும் விடாபிடி குணத்தையும் கொண்டு போராடி அதன் விளைவாகவே இறந்தும் போகிறது. பிறப்பிலேயே வெளிப்படும் அதன் புத்திக் கூர்மை, போராடும் குணம், நுண்ணறிவு, வீரம் போன்றவற்றால் தான் அவை இந்நிலத்தின் அரசனாக வாழ்கின்றன என்பதை ஜென் பயில்கிறான். அதனை வளர்க்க தான் எடுத்துக் கொண்ட செயலின் குற்ற உணர்ச்சியால் வருந்தவும் செய்கிறான்.

மனிதர்களின் அதிகாரத்திற்கும் இயற்கைக்கும் ஆன போர் பல்வேறு கட்டங்களில் இந்நாவலில் வெளிப்படுகிறது. மங்கோலிய நிலத்தின் தன்மையை ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப மாறும் விதத்தை, ஓநாய்கள் எவ்வாறு புல்வெளிகளை நாசம் செய்யும் உயிர்களை உணவாக்கிக் கொள்கிறது, ஒவ்வொரு விலங்கிற்கும் அது கையாளும் போர்த் திறம், கூட்டாக செயல்படும் அதன் ஒற்றுமை என ஓநாய்களைப் பற்றி முழு திறனாய்வு தொகுப்பாக இந்நாவல் விரிகிறது.
நம்பவே முடியாத அதன் ஆற்றலுக்கு சாட்சிகளாக சுவர் ஏறி ஆட்டு மந்தைகளை பலியாக்கும் காட்சி, மான் வேட்டை, குதிரை படுகளம் என மெய்சிலிர்க்கும் பகுதிகளால் நிரம்ப பெற்றது இந்நாவல்.
ஜென் சென் மங்கோலிய பிறப்பு இல்லையெனினும் ஓநாய்களை நேசிக்கிறான். அதிகாரியாக வரும் பாவோ மங்கோலிய வேர்களைக் கொண்டிருப்பினும் ஓநாய்களைக் கொன்று குவிக்கிறார். பில்ஜி, உல்ஜி உள்ளிட்ட குழுத் தலைவர்கள் தங்கள் உயிரினும் மேலாக அவற்றை வணங்குகின்றனர். நாளைக்கு தாங்கள் இல்லையெனினும் ஓநாய்கள் இருப்பின் மேய்ச்சல் நிலம் வளத்தோடு இருக்கும் என நம்புபவர்கள். இவர்களைத் தவிர்த்து நாவலில் வரும் மனிதர்கள் இரண்டு விதத்தில் பிரிந்து தங்கள் வாதத்தை வைப்பவர்கள். இப்படி பொதுவாக சொல்லலாம் ஓநாய்களை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள். கடைசியில் வெறுப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். நிலம் தோல்வியடைகிறது.
30 வருடங்களில் நிலம் பாலைவனமாகிவிடுகிறது. அதற்கு காரணமான யாருக்கும் அது பெரிய வழியாக இருக்கப் போவதில்லை. ஆனால் ஜென்னுக்கும், பில்ஜி வழி வந்தவர்களுக்கும் அது மாறாத வடுவாக பதிந்து நிற்கிறது.
அந்த வலி தான் நாவலின் உச்சகட்டம். இயற்கையின் மாசற்ற அதே நேரத்தில் நேர்த்தியான ஒரு உயிரினத்தை அதன் வாழ்விடத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடித்த மனிதகுலத்தின் மோசமான வரலாறின் பதிவாக இந்நாவலை நான் பார்க்கிறேன்.

உலகின் பெரும்பகுதியை தங்கள் ஆளுகைக்கு கொண்டு வந்த செங்கிஸ்தான் வழிபட்டு பின்பற்றிய ஓநாய்கள் கடந்த கால காற்றோடு கரைந்து போய்விடுகிறது. 
ஓநாய்க்குட்டியை எங்கிருந்து எடுத்தார்களோ அந்த குகைக்கு திரும்பி வரும்போது யாங் கீ, ஓநாய்க்குட்டியை அழைக்கும் போது கண்கலங்கி விட்டேன். நமக்கு விருப்பத்துக்குரிய ஒருவரை இழந்துவிடும் சோகம் அது.

மகத்தான இயற்கைக்கும் பேராசை மனிதர்களுக்குமான போரின் ஒரு பாகத்தைத் தரிசிக்க இந்நாவல் உதவும். இயற்கை பாழ்பட்டு போகும் போது நாமும் தான் ஆற்றல் இழக்கிறோம் என்பதை நுண்மையான விவரிப்பில் வாசிக்க தரும் நாவல் இது.

தனித்திருக்க வேண்டிய இப்பருவத்தில் இயற்கையை உணர கிடைத்த வாய்ப்பாக இந்நாவல் நிச்சயம் அமையும். இந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் நெட்ப்ளிக்ஸ்-இல் பார்க்க கிடைக்கிறது.

மகத்தான நூல்.

ஓநாய் குலச்சின்னம் நாவல் / Wolf Totem tamil ...
Tamil Book Cover Image

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து