முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலர்: அத்தியாயம் ஒன்று


1

காத்திருக்கும் நேரம் கூடிக் கொண்டே போனது. கலந்தாய்வு எப்போ தொடங்கும் என தெரியவில்லை. காலை எட்டு மணியில் இருந்து நின்று கால் வலிக்க தொடங்கியது. பரந்து விரிந்திருந்த ஆடிடோரியத்தின் பக்கவாட்டு வாசலின் முன்பு ஆயிரக்கணக்கில் மாணவர் திரள். கையில் பைல்களோடும் கண்களில் கனவுகளோடும். அம்மாக்கள், அப்பாக்கள், சிலருக்கு தாத்தா, பாட்டி, கார்டியன் இப்படி.

மஞ்சள் நிறப் பூக்களும் உதிர்ந்த இலைகளின் சருகுகளும் கலந்து அந்த இடத்தை நிரப்பி இருந்தது.

முதல் அறிவிப்பு வெளியானது. மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிந்து நிற்க சொல்லி.
கட்ஆப் மேலிருந்து கீழ் நோக்கிய வரிசையில்.
மாணவர்கள் எதற்கோ கட்டுப்பட்டவர்கள் போல அறிவிப்பைத் தொடர்ந்து பரபரப்போடு வரிசை பிரிந்து நின்றோம்.

அதிகபட்ச மதிப்பெண்ணிலிருந்து அதை விட 20 குறைந்த மதிப்பெண் வரை முதலில் உள்ளே அழைத்தார்கள்.

எல்லோரும் பி.காம் எடுக்க விரும்பினோம். முதல் இருபதில் என் பெயர் இருந்ததில் வியப்பேதும் இல்லை. பத்து, பன்னிரண்டு வகுப்புகளில் படிக்கும்போது மதிப்பெண் தான் எல்லாமும் என்று சொல்லித் தரப்பட்ட அறிவுரைகளினால் படித்து கொண்டே இருந்ததன் விளைவு. வேறு எதிலும் கூட நாட்டமில்லை. கண்ணாடி அணியும்போதே விளையாட்டையும் உதறிவிட வேண்டும்.

“சாதி சான்றிதழ் கொடுங்கப்பா” எதிரில் அமர்ந்திருந்த நான்கு ஆசிரியர்களில் ஒருவர் விண்ணப்ப எண்ணை சரிபார்த்தவாறே கேட்டார்.

“சாதி சான்றிதழ் இல்லை சார்” அப்பாவின் விடாப்பிடியான கொள்கையினால் கடைசி வரை சாதி சான்றிதழ் எடுக்கவில்லை. அரசுடைய எந்த சலுகையும் வேண்டியதில்லை என்பதில் விடாப்பிடியாக இருந்தவர்.
பிற சாதிகள் அல்லது முன்னேறிய பிரிவில் என் பெயர் சேர்க்கப்பட்டது. 

முதலில் வெளியே வந்த ஐந்தில் நான் ஒருவன் மட்டுமே பையனாக இருந்தேன்.

நான் பையன் தான். விளையாட போனதில்லை. சண்டைக்கு போனதில்லை. வெளிய ஊர் சுற்ற சென்றதில்லை. நண்பர்கள் வீட்டுக்கோ நண்பர்கள் என் வீட்டுக்கோ வந்ததில்லை.

எங்கெல்லாம் எனக்கு தேவைப்பட்டதோ அங்கெல்லாம் துணையாக புத்தங்கங்கள் இருந்தன. இருக்கின்றன.

2

என் பெயர் கேட்டு திரும்பினேன். ஒரு பெண். முதலில் நம்ப மறுத்தாலும் நடந்தது அது தான். அறிமுகமே இல்லாத முகம். ஆனால் அழகானது. மஞ்சள் நிறப் பூக்கள் இவளிடம் இருந்து நிறத்தைப் பெற்றிருக்க கூடும். Cringe.

“கதிர், பீஸ் எங்க கட்டணும் தெரியுமா” முதல் வரியிலேயே ஏதோ ஆறாம் வகுப்புல இருந்து இப்போ வரை ஒன்றாக படிக்கிற பழக்கம் போல தொனித்தது. அப்படி இருந்திருக்க அவசியமில்லை. இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ.

“ஆபிஸ் முன்னாடி வெய்ட் பண்ண சொன்னாங்க. அங்க தான் கட்டணும்னு நினைக்கிறேன்”

“ஓ” இடைவெளி எடுத்துக் கொண்டு யோசித்தவள் போல “ம். நீ முன்னாடி போ. நான் வரேன்”

என்னோட அம்மா கூட இருந்ததை அப்போ தான் கவனிச்சேன். அம்மா கேள்வி எதுவும் கேட்டுற முன்னாடி நானே பதிலை சொன்னேன்.
“யாருனு தெரியலை மா.”

அம்மா 'யாருனு தெரியாமய பேர சொல்லி கூப்பிடுது' என கேட்டிருக்க வேண்டும். அதற்கான அவகாசத்தை நான் கொடுக்காம முன்னே நடந்து செல்லவும் வேறு வழியின்றி அம்மாவும் பின்னாடி வந்தார்.

ஆலமரத்தின் கீழே அலுவலகத்தின் முன்னே போடப்பட்டிருந்த பலகையிலும் மரத்தின் வேர்களிலும் மாணவர்கள், பெற்றோர்கள் அமர்ந்திருந்தோம். இன்னும் சிலர் வந்து கொண்டிருந்தனர்.

நான் இன்னும் அவள் குரலின் பிடியில் இருந்தே வெளியே வரவில்லை. எனக்கொரு தோழி இருந்தாள் பள்ளிப் பருவத்தின் கடைசி வருடத்தில்.

எந்த பெண்ணிடமும் நானாக சென்று பேசிய பழக்கம் கிடையாது. ஆனால் நாளை கண்டிப்பாக இந்த கணக்கோ, கிரமாரோ செய்துவர வேண்டும் என்கிற சூழல்களில் என்னை சுற்றிக் குவியும் பெண்களுக்கு உதவுவதை தவிர வேறு வழியில்லை. அதனை தாண்டி நானாக சென்று பேசியதில்லை. வெளியேயும் இதே தான். ஆனால் ஒரு நாள் குடியரசு தின சிறப்புரைக்காக கொடிக்கு பின்னால் நிற்கும் போது, ‘நீ வர மாட்டியோன்னு பயந்தேன்’ என்றாள் அவள்.

நான் வணிகவியல் பிரிவு. அவள் உயிரியல் பிரிவு. “எதுக்கு”

“அப்புறம் என்னை பேச சொல்லிடுவாங்களே” என்று சிரித்தாள்.

நான் உணர்சிகளற்று இருந்தேன். “உன்னுடைய எண் கொடு”
கைகளில் குறித்துக் கொண்டாள். நிறைய பேசினோம். அறிகுறிகளற்று வந்து செல்லும் மழை போல வந்ததும் சென்றதும் தெரியவில்லை.

கொஞ்ச நாள் கஷ்டமாக இருந்தது. எதனால் இப்படி என உணரும் வரை. அப்புறம் அதை கடப்பது பெரிய விசயமில்லை என தோன்றவும் பழகிடுச்சு. ஒரு மாதம் ஆனது இதற்கு இடையில்.

3

அலுவலகத்தில் இருந்து நேராக வெளிக் கதவை நோக்கி செல்லும் சாலையில் நானும் அம்மாவும் நடந்து சென்றுக் கொண்டிருந்தோம். அவள் ஓடி வந்தாள்.

“கதிர், உன்னோட நம்பர் கொடு.” கைகளில் குறித்துக் கொண்டாள். அவளிடம் பைல் இருந்தது. அதில் ஒரு தாள் கூடவா இல்லை. கைப்பை அணிந்திருந்தாள். அதில் செல்பேசியே கூட வைந்திருந்திருக்கலாம்.
எண் சொன்னேன்.

“சரி, பார்க்கலாம். ஆன்டி வரேன்” என்று நழுவி சென்றாள்.

அம்மாவுக்கு இப்போது கேட்க கேள்விகள் இருந்தாலும் நான் முந்திக் கொண்டு பதில் சொல்லாமல் அமைதி காத்தேன். அம்மா எதுவும் கேட்கவில்லை.

அங்கிருந்து கிளம்பி வந்தோம். அவள் பெயரை யோசித்துக் கொண்டிருந்தேன். இல்லை, அவளே சொல்லட்டும்.

இப்போதைக்கு அவள் பெயர் ‘மலர்’ என்று இருக்க வேண்டும் என விரும்பினேன்.

காத்திருப்பு நீண்டது.
***

ஏப்ரல் 20, 2020
பிரபாகரன் சண்முகநாதன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து