1
காத்திருக்கும் நேரம் கூடிக் கொண்டே போனது. கலந்தாய்வு
எப்போ தொடங்கும் என தெரியவில்லை. காலை எட்டு மணியில் இருந்து நின்று கால் வலிக்க
தொடங்கியது. பரந்து விரிந்திருந்த ஆடிடோரியத்தின் பக்கவாட்டு வாசலின் முன்பு
ஆயிரக்கணக்கில் மாணவர் திரள். கையில் பைல்களோடும் கண்களில் கனவுகளோடும்.
அம்மாக்கள், அப்பாக்கள், சிலருக்கு தாத்தா, பாட்டி, கார்டியன் இப்படி.
மஞ்சள் நிறப் பூக்களும் உதிர்ந்த இலைகளின் சருகுகளும்
கலந்து அந்த இடத்தை நிரப்பி இருந்தது.
முதல் அறிவிப்பு வெளியானது. மதிப்பெண்கள் அடிப்படையில்
பிரிந்து நிற்க சொல்லி.
கட்ஆப் மேலிருந்து கீழ் நோக்கிய வரிசையில்.
மாணவர்கள் எதற்கோ கட்டுப்பட்டவர்கள் போல அறிவிப்பைத்
தொடர்ந்து பரபரப்போடு வரிசை பிரிந்து நின்றோம்.
அதிகபட்ச மதிப்பெண்ணிலிருந்து அதை
விட 20 குறைந்த மதிப்பெண் வரை முதலில் உள்ளே அழைத்தார்கள்.
எல்லோரும் பி.காம் எடுக்க
விரும்பினோம். முதல் இருபதில் என் பெயர் இருந்ததில் வியப்பேதும் இல்லை. பத்து,
பன்னிரண்டு வகுப்புகளில் படிக்கும்போது மதிப்பெண் தான் எல்லாமும் என்று சொல்லித்
தரப்பட்ட அறிவுரைகளினால் படித்து கொண்டே இருந்ததன் விளைவு. வேறு எதிலும் கூட
நாட்டமில்லை. கண்ணாடி அணியும்போதே விளையாட்டையும் உதறிவிட வேண்டும்.
“சாதி சான்றிதழ் கொடுங்கப்பா”
எதிரில் அமர்ந்திருந்த நான்கு ஆசிரியர்களில் ஒருவர் விண்ணப்ப எண்ணை சரிபார்த்தவாறே
கேட்டார்.
“சாதி சான்றிதழ் இல்லை சார்”
அப்பாவின் விடாப்பிடியான கொள்கையினால் கடைசி வரை சாதி சான்றிதழ் எடுக்கவில்லை.
அரசுடைய எந்த சலுகையும் வேண்டியதில்லை என்பதில் விடாப்பிடியாக இருந்தவர்.
பிற சாதிகள் அல்லது முன்னேறிய
பிரிவில் என் பெயர் சேர்க்கப்பட்டது.
முதலில் வெளியே வந்த ஐந்தில் நான் ஒருவன்
மட்டுமே பையனாக இருந்தேன்.
நான் பையன் தான். விளையாட போனதில்லை.
சண்டைக்கு போனதில்லை. வெளிய ஊர் சுற்ற சென்றதில்லை. நண்பர்கள் வீட்டுக்கோ
நண்பர்கள் என் வீட்டுக்கோ வந்ததில்லை.
எங்கெல்லாம் எனக்கு தேவைப்பட்டதோ
அங்கெல்லாம் துணையாக புத்தங்கங்கள் இருந்தன. இருக்கின்றன.
2
என் பெயர் கேட்டு திரும்பினேன்.
ஒரு பெண். முதலில் நம்ப மறுத்தாலும் நடந்தது அது தான். அறிமுகமே இல்லாத முகம். ஆனால்
அழகானது. மஞ்சள் நிறப் பூக்கள் இவளிடம் இருந்து நிறத்தைப் பெற்றிருக்க கூடும். Cringe.
“கதிர்,
பீஸ் எங்க கட்டணும் தெரியுமா” முதல் வரியிலேயே ஏதோ ஆறாம் வகுப்புல இருந்து இப்போ
வரை ஒன்றாக படிக்கிற பழக்கம் போல தொனித்தது. அப்படி இருந்திருக்க அவசியமில்லை.
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ.
“ஆபிஸ் முன்னாடி வெய்ட் பண்ண
சொன்னாங்க. அங்க தான் கட்டணும்னு நினைக்கிறேன்”
“ஓ” இடைவெளி எடுத்துக் கொண்டு
யோசித்தவள் போல “ம். நீ முன்னாடி போ. நான் வரேன்”
என்னோட அம்மா கூட இருந்ததை அப்போ
தான் கவனிச்சேன். அம்மா கேள்வி எதுவும் கேட்டுற முன்னாடி நானே பதிலை சொன்னேன்.
“யாருனு தெரியலை மா.”
அம்மா 'யாருனு தெரியாமய பேர சொல்லி
கூப்பிடுது' என கேட்டிருக்க வேண்டும். அதற்கான அவகாசத்தை நான் கொடுக்காம முன்னே
நடந்து செல்லவும் வேறு வழியின்றி அம்மாவும் பின்னாடி வந்தார்.
ஆலமரத்தின் கீழே அலுவலகத்தின்
முன்னே போடப்பட்டிருந்த பலகையிலும் மரத்தின் வேர்களிலும் மாணவர்கள்,
பெற்றோர்கள் அமர்ந்திருந்தோம். இன்னும் சிலர் வந்து கொண்டிருந்தனர்.
நான் இன்னும் அவள் குரலின்
பிடியில் இருந்தே வெளியே வரவில்லை. எனக்கொரு தோழி இருந்தாள் பள்ளிப் பருவத்தின்
கடைசி வருடத்தில்.
எந்த பெண்ணிடமும் நானாக சென்று
பேசிய பழக்கம் கிடையாது. ஆனால் நாளை கண்டிப்பாக இந்த கணக்கோ,
கிரமாரோ செய்துவர வேண்டும் என்கிற சூழல்களில் என்னை சுற்றிக் குவியும் பெண்களுக்கு
உதவுவதை தவிர வேறு வழியில்லை. அதனை தாண்டி நானாக சென்று பேசியதில்லை. வெளியேயும்
இதே தான். ஆனால் ஒரு நாள் குடியரசு தின சிறப்புரைக்காக கொடிக்கு பின்னால் நிற்கும்
போது, ‘நீ வர மாட்டியோன்னு பயந்தேன்’ என்றாள் அவள்.
நான் வணிகவியல் பிரிவு. அவள்
உயிரியல் பிரிவு. “எதுக்கு”
“அப்புறம் என்னை பேச
சொல்லிடுவாங்களே” என்று சிரித்தாள்.
நான் உணர்சிகளற்று இருந்தேன்.
“உன்னுடைய எண் கொடு”
கைகளில் குறித்துக் கொண்டாள்.
நிறைய பேசினோம். அறிகுறிகளற்று வந்து செல்லும் மழை போல வந்ததும் சென்றதும்
தெரியவில்லை.
கொஞ்ச நாள் கஷ்டமாக இருந்தது. எதனால்
இப்படி என உணரும் வரை. அப்புறம் அதை கடப்பது பெரிய விசயமில்லை என தோன்றவும்
பழகிடுச்சு. ஒரு மாதம் ஆனது இதற்கு இடையில்.
3
அலுவலகத்தில் இருந்து நேராக வெளிக்
கதவை நோக்கி செல்லும் சாலையில் நானும் அம்மாவும் நடந்து சென்றுக் கொண்டிருந்தோம்.
அவள் ஓடி வந்தாள்.
“கதிர், உன்னோட நம்பர் கொடு.”
கைகளில் குறித்துக் கொண்டாள். அவளிடம் பைல் இருந்தது. அதில் ஒரு தாள் கூடவா இல்லை.
கைப்பை அணிந்திருந்தாள். அதில் செல்பேசியே கூட வைந்திருந்திருக்கலாம்.
எண் சொன்னேன்.
“சரி,
பார்க்கலாம். ஆன்டி வரேன்” என்று நழுவி சென்றாள்.
அம்மாவுக்கு இப்போது கேட்க
கேள்விகள் இருந்தாலும் நான் முந்திக் கொண்டு பதில் சொல்லாமல் அமைதி காத்தேன்.
அம்மா எதுவும் கேட்கவில்லை.
அங்கிருந்து கிளம்பி வந்தோம். அவள்
பெயரை யோசித்துக் கொண்டிருந்தேன். இல்லை, அவளே சொல்லட்டும்.
இப்போதைக்கு அவள் பெயர் ‘மலர்’
என்று இருக்க வேண்டும் என விரும்பினேன்.
காத்திருப்பு நீண்டது.
***
ஏப்ரல் 20, 2020
பிரபாகரன் சண்முகநாதன்
கருத்துகள்
கருத்துரையிடுக