முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கடிதம்


அன்பின் பிரபாவுக்கு,

     நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன். 

     உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.

     உன்னோடு அலையில் பேசலாம் என்றே அலைபேசியை எடுத்தேன். நடுங்குகிற என்னுடைய குரல் உன்னை நிலை குலைய செய்யலாம் என்பதற்காக அதனை தவிர்கிறேன். வார்த்தைகளைத் தேடி பயத்தைக் கொட்டி விடுவது ஆறுதலாக இருக்கிறது.

     உன் கவிதையின் ஒரு வரி மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. ‘நேற்றைக்கு அணிந்திருந்த முகமூடியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்’ அது எதைப் பற்றிய கவிதை என்பது கூட நினைவில் இல்லை. நீ எனக்கு அனுப்பி இருக்கிற பிரதியில் தேடலாம் தான். ஆனால் முழு கவிதையைப் படித்தால் இந்த உணர்வு இருக்குமா என தெரியவில்லை. இந்த ஒரு வரி போதுமானது. அந்த முகமூடியை எல்லோரையும் போலவே நானும் தவற விடுகிறேன்.

     இந்த கடிதம் எவ்வளவு தூரம் நீள இருக்கிறது என தெரியவில்லை. பாதியில் நிறுத்துவதற்கு முழுதுமாக எழுதி இதிலிருந்து கடந்துவிடவே விரும்புகிறேன். இந்த சூழலில் இருந்து விடுபடும் விருப்பத்தைப் போலவே.

     உன்னுடைய நிலைத் தகவல்களைப் பார்த்தேன். கதைகள் எழுத முயற்சி செய்கிறாய் போல. ‘ஒளிந்திருக்கும் வானம் படித்தேன். என்னை பிரதி செய்வதைக் காண்கிறேன். படைப்பாளனுக்கு வாக்கப்பட்டால் எழுத்துகளில் தான் வாழ்க்கை போல. ரொம்ப ரசிச்சேன் டா. இன்னும் நீ நிறைய எழுதணும். இப்போதைக்கு அது மட்டும் தான் என்னால் சொல்ல முடிகிறது.

     கனவுகளில் வருவதை சொன்னால் அதனை நீ ஒரு கதையாக எழுதிவிடுவாய். மஞ்சள் கொன்றை மரம் நினைவில் இருக்கிறதா. பெரும்பான்மையான நமது சந்திப்புகளின் சாட்சி. அது எழுந்து நடந்து வருகிறது. நீண்ட வேர்களில் இருந்து உதிரும் செம்மண் கல்லூரி சாலைகளில் பெய்கிறது. நீ இன்னும் வரவில்லை. உன் சோம்பேறித்தனத்தை நினைத்து சலிப்பு அடைந்து அமர்ந்திருக்கிறேன் கூடைப்பந்து கம்பத்தின் கீழ் திண்டில். முக கவசத்தைக் கேட்டவாறே வாகை மரத்துக்கு அருகே அமர்கிறது கொன்றை மரம். கொஞ்ச நேரத்தில் வாகை மரமும் எழுந்துவிடுமோ என நான் அஞ்சும் போது அந்த சாலையில் நீ வருகிறாய். தானோஸ் கையைச் சொடுக்கிய போது உதிர்ந்து விழுவது போல மரங்கள், நீ, சாலை எல்லாமும் காணாமல் போகும் போது நான் அறையில் இருக்கிறேன். எழுந்து அமர்கிறேன். அம்மா தண்ணீர் எடுத்து தருகிறாள். தண்ணீரும் அவளும் உதிர்கிறார்கள். மெத்தையில் இருந்து கீழே விழுகிறேன் கனவிலேயே. நான் கனவில் இருந்து விழித்து விட்டேன்.

     விரைவில் எல்லாமும் சரியாக வேண்டும். திருப்பாவை வாசிக்கிறேன். என்னால் ஒருபோதும் பாட முடியாது. இருந்தும் சத்தம் எழுப்பி வாசிப்பது அம்மாவே கூட இருப்பது போல இருக்கிறது. வழக்கமான நாட்கள் தொடங்கியதும் நீண்ட தொலைக்கு உன்னோடு நடந்து சென்று பாய் கடையில் உரப்பு தாங்காமல் உதட்டில் எரிச்சலோடு ஆட்டுக்கால் சூப் குடிக்க வேண்டும். அப்படியே அங்கிருந்து நடந்து இரண்டு ஐஸ்கிரீம். இருட்ட போகுது. வீட்டுக்கு போ என நீ துரத்தும் வரை பூங்காவில் உன் மடியில் தூங்கி எழ வேண்டும். காத்திருக்கிறேன்.

     அம்மாவைக் கேட்டதாக சொல்லு. தங்கச்சி எப்படி இருக்கா. என்ன செய்யுறா. எல்லாம் சரியானதும் என்னை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதா சொல்லு. நீ தான் அவர்கள் எல்லோருக்கும் நம்பிக்கை. எனக்கும் தான்.

நீ எழுதுவதை எதிர்நோக்கி,
ஆதிரா









    


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து