முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகள் காலத்தின் தூதுவர்கள்

சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு (தமிழில் கே.வி.ஷைலஜா)
பகிர்வு:

 "ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்தி வைத்துக் காத்திருக்கும்
எப்போதும்"
- பாலசந்திரன் சுள்ளிக்காடு

வாழ்ந்துப் பார்ப்பது மட்டும் தான் வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ள ஒரே வழி என்று குறிப்பிடும் பாலசந்திரன் வாழ்வின் இரகசியங்களை காலத்தில் அவை ஒளிந்து விளையாடும் மாயங்களைப் பதிந்து செல்கிறார்.

தொடர்வண்டி பயணமொன்றில் துணையாக படித்த சிதம்பர நினைவுகள் உலகைக் குறித்தும் மனிதர்களைக் குறித்துமான பார்வைகளை ஒரு முறை நினைவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

பாலசந்திரன் மொழி அவரோடு நம்மையும் சேர்த்து பசியின் கொடுமையைத் தாளாது சாலையில் பரதேசியாக அலைபவனாகவும் கவிதைக்காகவும் கொள்கைக்காகவும் வீட்டைத் துறப்பவனாகவும் ஐந்து ரூபாய்க்கு சிவாஜி கணேசனின் பட விளம்பரத்தை வாசித்த பையன் 20 வருடங்களுக்குப் பிறகு அவர் கையாலே மது பரிமாறுவதை ஏற்கிறவனாகவும் இப்படியாக மகிழ்ச்சி, துயரம், சபலம், அவமானம், அன்பு, உறவு என வாழ்வை பிணைத்திருக்கும் சரடுகளோடு பயணிக்க வைக்கிறது.
மனிதர்களை மிகக் குறிப்பாக பெண்களை கடக்கிற அனுபவங்கள் நேர்மையோடு கடத்தப்படுகின்றன. பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு தனியார் பள்ளிக்கு மாறுகிறவர் அவமானங்களை பரிகாசங்களை எதிர் கொள்ளும் போது ஆதரவாக வகுப்பின் உள்ளிருந்து சிரிக்கும் சாரதாவின் நேர்மறை அலை, படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி சாஹினாவிடமிருந்து பெற்ற முத்தம் பின்னாளில் அவளின் தீக்காய முகத்தில் எதிர்பாராது திருப்பி கொடுத்தது, சபலத்தின் கட்டுகளினால் ஆட்பட்டதற்கு பலியாகிப் போன ஸ்ரீதேவி, ராதிகா, லைலா, பணத்தைக் கொடுக்காமல் இரவு ஏமாற்றப்பட்ட வேசி அன்போடு காலையில் கொடுத்து போன ஐந்து ரூபாய், மார்த்தா, அம்மா, அப்பா, தங்கை, மனைவி, மகன் என ஒரு மனிதன் கடக்க சாத்தியமான உயர்வு தாழ்வுகளை உணர்ச்சிபூர்வமாக முன்வைப்பதில் எவ்வித சுய பிரகடனமும் தென்படாதது பாலசந்திரனின் நிலைப்பாட்டைத் தெளிவாக்குகிறது.

சோர்ந்து போய் உலகின் மீதும் நமக்கான விதியின் மீதும் நம்பிக்கையிழக்கும் போது உலகம் அதை விடப் பெரிதானது என உணர்த்தும் தருணங்களை அறிமுகப்படுத்துகிறது சிதம்பர நினைவுகள்.

சிற்பங்களும், கல்தூண்களும், உயர்ந்த கோபுரமும் மறைந்து வயதான கிழவர் தான் இருக்கும் வரை கவனித்துக் கொள்ளத் துடிக்கும் மனைவியின் மீது கொண்டிருக்கும் தீராத அன்பின் சாட்சியை சொல்லும் முதல் கட்டுரையில் தொடங்கும் நூல், கமலாதாஸுக்கு ஸ்வீடிஷ் கவிஞர் ஷென் எஸ்ப்மெர்க் வெளிப்படுத்தும் அன்பின் பரிமாறுதல் பேசும் இறுதி கட்டுரையில் முடிவடைகிறது. இடைப்பட்ட 18 கட்டுரைகளிலும் வாழ்வின் பல நிறங்கள்.

ஒரு சுவாரசியமான மனிதனாக நான் பாலசந்திரனைப் பார்க்கிறேன். எல்லா நிலைகளிலும் வாழ்வின் மீதான அவரின் நிலைப்பாடும் எதிர்வினையும் மனிதர்களுக்கான பாடங்கள். தன் கண் முன்னே கடந்து போகும் இறப்புகள், அதன் பாதிப்புகள், நினைவுகள் எவ்வித சலனமுமற்றதாக உலகம் நிச்சயம் இருக்க போவதில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. அது மகா நடிகரான சிவாஜியாக இருக்கட்டும், கேரளத்து தெருக்களில் பரதேசியாக அலைந்த பாலசந்திரனாக இருக்கட்டும் நானாகவோ நீங்களாகவோ இருக்கட்டும் காலத்தின் அலைகளில் அடித்துச் செல்லும் கட்டைகளாக தான் இருக்கிறோம். நம் நினைவுகளே நமக்கான காலத்தைக் காட்டுகிறது.

மொழிப்பெயர்ப்பா என ஆச்சரியப்பட வைக்கிறது ஷைலஜா அவர்களின் நடை. சிதம்பர நினைவுகளில் தொலைந்துப் போன என்னை மீட்பதற்கு ஒரு தேநீர் தேவைப்பட்டது. உங்களுக்கு எப்படியோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து