முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கெங்கும் நீலம்

காணும் இடமெல்லாம் நீலம். பேரமைதியை அணிந்திருக்கிற கடலின் முகமெல்லாம் நீலம். விரிந்திருக்கும் அதன் எல்லையில் தொடங்கி மேலெழும் வானமெங்கிலும் நீலம். 

சூரியன் மறைந்த பிறகும் மீதமிருக்கும் வெளிச்சத்தில் இதமான கடற்காற்றின் குளிரில் கடலுக்கு பத்து அடிக்கு மேலிருந்து தடதடக்கும் தொடர்வண்டியின் கதவோரம் மிகச் சரியாக பத்து நிமிடங்கள் நேரம் செலவழிக்க நீங்கள் தயாராக இருந்தால் பதிலீடாக பெருவியப்பினையும்  இயற்கையின் மீதான பெரும்நம்பிக்கையையும் நாம் தான் இயற்கை, இயற்கை தான் நாம் என்பதனையும் உணர முடியும்.

தமிழ்நாட்டின் மண்டபம் பகுதியிலிருந்து இராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்தில் தான் அந்த பயணம்.

தமிழ்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து இராமேஸ்வரத்தை கடல் துண்டித்திருப்பினும் மொழி இணைத்திருக்கிறது. இந்த வாக்கியம் சரியா என எனக்கே குழப்பமாக இருக்கிறது. பலகைகளில் தொடங்கி முகங்கள் வரை தமிழைத் தேட வேண்டிய நிலை தான்.  கோவிலின் தரையெங்கும் வடமொழி வாசகங்கள். பலகை அனைத்திலும் தமிழுக்கும் சிறிதும் இடம் உண்டு. 

சுற்றி சுற்றி மடங்கள். இராமேஸ்வரத்தினை இரண்டாக வகுந்து விட முடியும். புனித (?) தலம் மற்றும் மீனவ கிராமம் என. புனித தலம் என்பது குறித்து என்னிடம் கருத்துகள் இல்லை. மாலைகள், பூக்கள், அழுக்கடைந்த துணிகள், சாம்பல் இவை குறித்து கடலுக்கு புகார்கள் இருக்கலாம். தொழில் போட்டி, என் வியாபாரத்தை இவன் கெடுத்தான், அவன் வியாபாரத்தை நான் கெடுப்பேன் என குடுமி சண்டைகள் குறித்து அவர்களுக்குள் புகார்கள் இருக்கலாம். ஆதரவற்ற அல்லது துண்டித்துக் கொண்டவர்களின் பசிக்கான வழியை புனித தலம் ஏற்படுத்தலாம். ஒரு பகுதி மக்களுக்கு தொழிலுக்கான வழியையும் கொடுத்திருக்கலாம். தொடர்ந்து பாவங்கள் (எது பாவம் என்பது வேறு சப்சக்ட்) செய்துக் கொண்டிருப்பவர்களுக்கு விமோசனம் என்னும் நிறைவை கொடுக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய் சொர்க்கத்துக்கான டிக்கெட் புக்கிங் வசதியையும் புனித தலம் செய்துக் கொடுக்கலாம்.

ஆனால் மீனவ கிராமம் என்கிற பகுப்பு கடலை நம்பியது. உழைப்பை நம்பியது. ஒவ்வொரு முறை மீனவர்களைக் கைது செய்யும் போதும் வலைகள், படகுகளைச் சேதப்படுத்தும் போதும் இயற்கை அறிவிப்புகளற்ற சூழல்களை அளிக்கும் போதும் தங்கள் வாழ்வியலை விட்டுத் தர மறுக்கும் போர்க் குணம் நிரம்பியது. சுற்றுலா, புனிதம் என்பதன் பேரில் கோவில்களுக்கு செல்லும் கோர வியாபாரத்துக்கு இரையான எத்தனையோ இடங்களுள் இதுவும் ஒன்று. 

நிலத்தின் பிரதிநிதிகளுக்கு கடல் புதிது. கடலின் மைந்தர்களுக்கு கடல் வாழ்வின் ஒரு அங்கம்.

இராமநாதபுரத்தை நெருங்கும் போதே உப்பு காற்றினை தோல் உணரத் தொடங்குகிறது. மீன் மணத்தினை வீச்சமாக பரிமாற்றமடையச் செய்கிறது நாகரீக மூளை.

அதிகாலை பாம்பனுக்குள் நுழைந்தேன். இடிபாடுகளோடு கீழே கிடக்கும் பழைய கட்டிட குவியல்கள். தன்னுள் ஈர்த்துக் கொண்டு இளம்பெண்ணின் சிறுநகை போல சலசலக்கும் கடல். அதன் முடிவுகளற்ற பரப்புக்குள் அங்கங்கு சிறு புள்ளிகள் போல படகுகள். உன்னத தருணங்கள் இராமேஸ்வர தீவு நிலத்தில் கால் வைக்கும் போது காணாமல் போய் விடுகின்றன.

சுற்றிலும் குப்பைகள். கடற் காற்றின் பிசுபிசுப்பை விட கசகசவென அலையும் குப்பைகளின் வீச்சம் முகத்தை சுளிக்க செய்கிறது.

வெயில் சுள்ளென்று அடிக்கிறது. நிழலைத் தேடி தாகம் கொள்கிறது மனம்.

சடங்குகள் என்ற பெயரில் கடலில் முங்கிடும் மனிதர்களை மனத்துக்குள் வெறுத்துக் கொண்டேன் நானும் நீரில் மூழ்கியவாறு. அப்படியொன்றும் திருமிகு கடவுளர்களின் ஆசிகள் வேண்டியதில்லை தான். கட்டாயங்கள் நிரம்பியது குடும்பம்.

கோவில் என்கிற உணர்வே ஏற்படாத அல்லது ஏற்பட்டுவிடக் கூடாதென்ற வலிந்து நிறுவப்பட்ட வரிசைகள். வழிபாடு என்பதன் மிக மோசமான பரிணாம வளர்ச்சியைக் காண முடிந்தது.

மூச்சு முட்டி கட்டுபாடுகளைத் தாண்டி கடவுள் (?) ஆமா அவரையும் பார்வையிட்டு வெளியே தலைக்காட்டும் போது தண்டனை தரும் பாவனையோடு சூரியன் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

ஓய்வுக்கு பிறகான மாலை நேர பாம்பன் இரயில் பயணம் மற்றுமொரு பேரமைதி உணர்வை இயற்கையோடான பிணைப்பை உணர்த்தி நகர்ந்தது.


வெளிச்சம், காலை, இருள், இரவு, குளிர், கடல், மேகங்கள், வானம் , காற்று, நீங்கள், நான், மூளை, சமூகம், கருத்தியல், அறிவு, மூடத்தனம், பக்தி, வழிபாடு, பக்தியின்மை, சடங்குகள் எல்லாமும் எல்லாமும் ஒன்றையே சொல்கின்றன. இயற்கை தான் நாம். நாம் தான் இயற்கை. இயற்கையின் அழிவு நமக்கும் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம். ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம்  எழுத்தாளர்: வா.மு.கோமு  உயிர்மை வெளியீடு முதற்பதிப்பு: டிசம்பர் 2022 பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெரு

நட்சத்திரங்களுக்கும் நிலத்துக்குமான ராட்டினம்! - நட்சத்திரவாசிகள் நாவல் அனுபவம்

நாவல் அட்டைப்படம் | பதிப்பகம் காலச்சுவடு முன்குறிப்பு: நட்சத்திரவாசிகள் நாவலுக்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் 2021 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதைப் பெற உள்ளார். அவரின் நூல் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரலில் நான் எழுதிய கட்டுரையை ஒரு விமர்சனப் போட்டிக்கு அனுப்பியிருந்தேன். போட்டி முடிவுகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அது போக தற்போது வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்பைக் காரணமாக வைத்து மெயிலின் அனுப்பிய அஞ்சலில் தூசி படித்திருந்த இந்தக் கட்டுரையை இங்கு பதிகிறேன். இந்தியாவின் தாராளமயமாக்கலுக்குப் பிறகு வளர்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பத் துறையும் ஒன்று. வேறு எந்த நாட்டை விடவும் இங்கு பரவலாக நிறுவப்பட, இந்திய சந்தையில் கிடைக்கிற இளைஞர்களின் திறனும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியுள்ள மலிவான ஊதியமும் காரணிகளாக இருக்கின்றன. சில பத்தாண்டுகளில் இதன் வளர்ச்சி என்பது இந்தியாவின் நிகர பொருளாதார மதிப்பில் எட்டு விழுக்காட்டுக்கு நெருக்கத்தில் உள்ளது. நான்கு மில்லியன் இந்தியர்களின் வாழ்வாதரமாக மாறியுள்ளது. தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் இந்தத் து