இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் நின்றுக் கொண்டிருக்கிறாய். முகத்தை மறு திசையில் திருப்பாதே.
மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு
கருத்துகள்
கருத்துரையிடுக