அண்டத்தை துலாக்கோலின் கம்பி போல நீட்டித்தால் அதன் ஒரு முனையை நான் பற்றியிருக்க மறு முனையில் எனது ஆதங்கங்கள், கவலைகள், சோர்வுகள், எதிர்பார்ப்புகள், கிட்டாத உவகைகள் என எல்லாமும் அழுத்திக் கொண்டிருக்க, பாரம் தாங்காது என் முனை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நானும் முடிந்தளவு அழுத்தம் கொடுத்த போதும் சிறு அசைவு கூட இல்லை மறுமுனையில்.
கரடிகளின் தாக்கத்தால் இறங்கிக் கொண்டிருக்கும் பங்கு மதிப்பு வரைபடத்தில் பாதாளம் நோக்கிய புள்ளியில் என் உணர்ச்சிகள் பேயை போல் நிற்கின்றன. மறுமுனையில் எளிய என் உரு நிழலின் எடையை ஒத்திருக்கிறது.
சொல்லி தீராத நாட்குறிப்பின் பக்கங்களில் முதல் பத்தியை மேற்கண்டவாறு தொடங்குகிறேன்.
கல்லூரி காணாத நாள் இன்று. நேற்றைய நாளின் கொடூரம் இன்றைய காலையை இருளுக்கு உள்ளாக்கியது. பொழுது விடிகையில் எழாத உடல் பொழுதெல்லாம் உற்சாகத்தோடு இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
முதல் வேலையை ஓரளவு நிறைவோடு செய்து முடித்தேன். பிற்பகலில் தூறிய ஓரளவு மழையைப் போல. சூரியன் ஒளிந்துக் கொண்ட நாட்களில் இன்றும் சேரும்.
அம்ருதா இதழில் பர்மா குறித்து மு.இராசேந்திரன் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். ஏதோவொன்று என்னை அத்தோடு பிணைத்துக் கொண்டுள்ளது. எனது பெரியய்யா வாழ்ந்த நிலம் .
ஹால என்கிற மொழிபெயர்ப்பு நாவலில் நான்கில் ஒரு பங்கு பக்கங்களைப் படித்தேன். ஹால என்றால் ஆண்மைக் குறைவு என்று பொருள். மூன்றாவது திருமணம் செய்த பிறகு இந்த பாதிப்புக்குள்ளாகிறான் அச் செல்வந்தன். மூன்று பெண்டாட்டிகள், பதினொரு பிள்ளைகள், அவன் மற்றும் ஆப்பிரிக்க - இஸ்லாமிய செல்வந்த நிலை - இவற்றை நாவல் பேசுகிறது.
புதிய பணியோடு தொடர்புடைய அலுவலகம் சென்றேன். சீரான மனிதரைச் சந்தித்தேன்.
செய்ய மறந்த வேலைகளின் அழுத்தத்தை உணர்கிறேன். நேர மேலாண்மையின் அவசியம் தவறுகையில் இத்தகு நிலையில் தத்தளிக்கிறேன்.
(நாட்குறிப்பு தேதி 16,அக்.2018 06:00 பி.ப.)
கருத்துகள்
கருத்துரையிடுக