நீர்க்குமிழிகளின்
நேசப் புன்னகையில்
பிரதிபலிக்கிறது
உன் முகம்
சிறு காற்றசைவில்
உதிர்ந்து விழும்
இலைக் குவியலில்
சலசலக்கிறது
உன் மெளனம்
மழை விட்டுச்சென்ற
குளிரை
மறக்கச் செய்கிறது
உன் நெருக்கம்
குளக்கரை
கூழாங்கற்கள்
சேகரித்த
உன் நினைவுகள்
தேங்கிடும் மழைச்சாரல்
வழியும் மிகுதி
உன் மகிழ்வுகள்
மின் கம்பியில்
படபடக்கும்
இரட்டைவால் குருவி
உன் குறும்புகள்
குவளையின்
இறுதி துளி
தேநீர்
உன் வசவுகள்
உதிர்ந்த சில துளி
சிரிப்புகள்
உன்னால்
நிகழ்த்தப்பட்ட
என் மரணங்கள்
மழை விட்டுச்
சென்ற குளிர்
நீ மறைகையில்
உறைந்த என் மனம்
கண்டெடுத்த
உன் பிம்பம்
கசக்கிய
காகிதப் பூ
கீறப்பட்டு
கிறுக்கப்பட்டு
சிதைக்கப்பட்டு
கிடந்தது
உன் ஓவியம்
சிதறிக் கிடக்கிற
உன் தேகத்தில்
கொட்டப்படுகின்றன
அனுதாபங்கள்
நீதி உரிமை
பாதுகாப்பு
ஒலிக்கும் குரல்களில்
மறைந்திருக்கிறது
அவலம்
போதும்
நிறுத்திக் கொள்ளச்
சொல்வோம் இச்சமூகத்தை
இவர்கள்
நல்லெண்ணத்தினால்
மூச்சு முட்டுகிறது
திணறும் எனக்கும்
திகைக்கும்
உனக்கும் கூட
கருத்துகள்
கருத்துரையிடுக