எத்தனையோ முறை நட்பு என்கிற சொல் என்னால் எள்ளி நகையாடப்பட்டிருக்கிறது. பல முறை உண்மையான நட்பு என்பதை அலட்சியப்படுத்திருக்கிறேன். நண்பர்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாதவனாய் நானிருந்திருக்கிறேன் என்பது எனக்கே கடினமான ஒன்றாக தோன்றுகிறது இன்று.
அப்படி என்ன நடந்து விட்டது... உண்மையான நட்பின் ஆசுவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதகதப்பு என்னை ஆறுதலாய் உணர வைக்கிறது. என்ன தவம் செய்தாயோ என புலம்ப வைக்கிறது.
காற்றில் எழும் சங்கீதம் செவியில் அறைந்தால் தானே இசை. இந்த செவிடனுக்கு உணர்த்தும் விதமாய் அறைந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது நட்பெனும் முரசு.
அலைகடல் எல்லாம் எனக்காகவே பொங்கி கொண்டிருக்கிறது. நிலவொளி எங்கும் எனக்காகவே படர்ந்து கொண்டிருக்கிறது. என் உணர்வுகளை கடத்தவே பனி உங்களையும் போர்த்தியிருக்கிறது.
வீதியெங்கும் அலறிக் கொண்டே ஓட வேண்டும் போல தோன்றுகிறது. இது ஒரு வகையான புது உணர்வாய் தோன்றுகிறது.
ஏதோவொரு மைய விசை பிணைத்து இணைத்து வேடிக்கை பார்க்கிறது. ஒரு நேரம் சிரிக்கவும் ஒரு நேரம் அழவும் ஒரு நேரம் கோபப்படவும் ஒரு நேரம் அணைக்கவும் செய்ய சொல்கிறது, உடலில் கோர்க்கப்பட்ட நூலின் அசைவுக்கு நாட்டியம் ஆடும் மரப்பாச்சிகளைப் போல.
சிரித்து சிரித்து அழுகிறேன். அழுது அழுது சிரிக்கிறேன். சீன தத்துவப்படி நன்மை முற்றினால் தீமை என்பது போலவோ!
என் இனிய நட்பே, என்னை என்னவெல்லாம் செய்திருக்கிறது பார் உன் ஒரு சொட்டு கண்ணீர்.
கருத்துகள்
கருத்துரையிடுக