உன் நெருக்கத்தை
உணருகிறேன்
அடர் பனி கோதும்
என் வெற்றுடம்பில்
படர்ந்திருக்கின்றன
கீறல்கள்
இரக்கமற்று
வீழ்த்தப்பட்ட நிலையில்
கிடக்கிறேன்
சடலமாய்
சிதைகாயங்களில்
உணவு தேடியலைகின்றன
ஈக்களும் வண்டுகளும்
ஒட்டுண்ணிகளும்
தன் விருப்பத்திற்கு
விளையாடுகிறது
என்னைப் போலவே
மெருதுவான பனி
பிரக்ஞைகள்
ஏதுமற்றே நான்
இன்னும் சற்றுநேரத்தில்
என்னைச் சுற்றி
பெருந்திரள் கூடிவிடும்
காக்கி உடைகளும்
வெள்ளை உடைகளும்
வரத்தான் போகின்றன
நான் எவ்வாறு
அடையாளம் காட்டுவேன்
யாரை சாட்சிக்கு
அழைத்து வருவேன்
காற்றைக் கிழித்த
என் கதறல்களை
கேட்டு நின்றது
நடுநிசி இரவு மட்டுமே
அதுவும் செய்வதறியாது
கண்ணீராய்
பனியை சிந்திக்
கொண்டிருந்தது
என்னை மொய்க்கும்
கேமரா கண்களின்
வழியே காணும்
கோடி ஜோடி கண்களில்
நீயுமிருப்பாய்
கனவுகூட கண்டிருக்க
மாட்டாய் தான்
உன் வரவேற்பறையில்
நான் இப்படி நுழைவதை
சகித்துக் கொள்ள கூட
முடியாது தான்
உன் கதாநாயகி
கூவ நதியின் ஓரத்தில்
கொப்பளிக்கும்
நாற்றத்தினிடையே
பிழையே செய்யாமல்
தண்டிக்கப்பட்டு
வீசப்பட்டிருப்பதை
பிழை
பிழை
பெண்ணாய் பிறந்தது
தானோ பிழை...
விசாரணையென்ற பேரில்
நீயும் அலைய
வேண்டியிருக்கும்
இப்பாவியை கரம்பிடிக்க
துணிந்த காரணத்தினால்
அன்பிற்குரிய காதலா
நீயெனக்கு நீதியெல்லாம்
பெற்றுத் தர வேண்டாம்
இல்லாத நான்
அதை கொண்டு
என்ன செய்ய
ஒன்று மட்டும் செய்
எனக்காக
உனக்கு பிறக்கப்
போகும் மகனின்
பதின்பருவத்தில்
பெண் குறித்த புரிதலை
சொல்லிக் கொடு
அதுவே போதுமானது
எனக்கும்
என்னைப் போன்றோருக்கும்
-பிரபா
கருத்துகள்
கருத்துரையிடுக