மீண்டும் மீண்டும்
தேடியலைகிறேன்
சொற்கள் கனியும்
தருக்கள் நிறைந்த
கானக வெளியை
எழுத்துகளை ஊட்டி
சொற்களைப் பூக்கும்
திறன் கொண்டிருக்கும்
மரங்கள் செறிந்தது
அக்கானகம்
அவை உதிர்க்கும்
கனிகளும்
கவி வித்துகளாய்
தரையில் படரும்
பொன்னிற நிலா
உதிர்க்கும் பனித் தூறலில்
நனையும் மரங்களிடை
புகுந்து வரும்
காற்றிலும் கலந்திருக்கும்
சங்கீத வாசனை
காவலாய் அக்கானகத்தை
சூழ்ந்திருக்கும்
வேங்கையிடம் கூட
முறையிட்டு பார்த்துவிட்டேன்
முறைத்துக் கொண்டே
கடக்கிறது உறுமல்
முயன்று முயன்று
பார்க்கிறேன்
எட்ட மறுத்து
விலகி விலகி
ஓடுகிறது
பேராற்றலின்
திருவுருவம்
சிந்தனைக்கும் அப்பாற்பட்டு
முடுக்கி விடுகிறேன்
மூளையின் வேகத்தை
அகப்பட மறுக்கிறது
நுழைவாயில்
எல்லாம் அவ்வளவுதான்
என களைத்து இளைத்து
அமரும் தருவாயில்
ஓங்கி அறைகிறது
கனவு வெளி
கருத்துகள்
கருத்துரையிடுக