“An oak tree is a daily reminder
that great things
often have small beginnings.”
-Matshona Dhliwayo
இடது கையை மேலாக தூக்கி கைபேசியை
உயர்த்தி அதில் செருகப்பட்டிருக்கும் செல்ஃபி ஆப்பின் வழியே தன்னைத் தானே படம் எடுத்து
உங்கள் பார்வைக்கு பதிவிடும் வழக்கமான செயலின் மாறுபட்ட வடிவம் தான் இந்த தளத்தின்
தொடக்கம். அதில் என் முகத்தின் வழியே உணர்ச்சிகளைப் படிப்பீர்கள். இதில் எழுத்தின்
வழியே. வேறுபாடு அவ்வளவே.
இயற்கையாகவே நான் அதிகம் பேசக்
கூடிய கதாபாத்திரம் இல்லை. அறிமுகமானவுடனே கவர்ந்து விடும் அளவிற்கு ஹாஸ்யம் கூட நிறைந்தவன்
இல்லை. அந்த தயக்க குணமே என்னை எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் பிடிப்புள்ளவனாக்கியது.
என்னிடமிருந்து எவ்விதமான செய்திக்கும்
உடனடி எதிர்வினையும் எளிதில் கிடைத்து விடாது. நான் அதற்கிட்ட பெயர் சோம்பல். என் அப்பாவின்
வார்த்தைகளின் படி 'ஃபிரசன்ஸ் ஆப் மைண்ட்' குறைவு.
எந்த செயலுக்கும் ஒரு தூண்டுதல்
உண்டு என்கிற அறிவியல் விதிப்படி இத்தளத்தின் தொடக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. நான்
பேச விரும்புகிறேன் - இந்த ஒற்றை வரியிலிருந்து தான் முகிழ் என்கிற வலைப்பூ முகிழ்ந்திருக்கிறது.
கணக்கியலில் குறிப்பிடப்படும் திருத்தியமைக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்று Materiality Principle என்பது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு மிகச் சரியாய் தெரியவில்லை. அதன் பொருள் முக்கியத்துவம் அற்ற, தொடர்பில்லாத விஷயங்களை புறக்கணித்து விடலாம் அல்லது வேறு ஏதாவதுடன் இணைத்துக் கொள்ளலாம் என்பது. அதற்கேற்ப இதில் தேவையில்லாத பொருத்தமில்லாத பதிவுகளை எழுதப் போவதில்லை என்பது என் உறுதியான நிலைப்பாடு. முக்கியத்துவம் எது என்பதற்கான வரையறையிலே பல்வேறு குழப்பங்கள் இருக்க தான் செய்கின்றன. அவற்றை முதலில் நான் விளங்கி கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் (!).
இந்த சிறு பையனின் சிறு முயற்சி
இத்தொடக்கம். இதில் நான் செய்ய போகும் பிழைகளை செய்வதற்கு முன்னே சொல்லி மன்னிப்பு
கேட்டு விடுகிறேன்.
- கவிதை என்ற பெயரில் எதையாவது
எழுதி கவிஞனாக முயற்சிப்பவன் என்று சப் டைட்டில் போடுவது
- சமூக அக்கறை குறித்த கட்டுரைகளை
அரைவேக்காட்டு தனத்துடன் சமைப்பது
- வாசித்த புத்தகத்துக்கு மதிப்புரை
என்ற பெயரில் புத்தகம் எழுதியவரை விட அதிகம் யோசித்து எழுதத் துணிவது
இது போன்ற பிழைகளுடன் உங்களுக்கு
தோன்றவிருக்கும் குற்றங்களுக்கும் சேர்த்து மன்னிப்பு கடிதத்தை சமர்பித்து விடுகிறேன்.
நிச்சயம் இவையெல்லாம் தொடராது பயில விரும்புகிறேன்.
உங்களுடன் என் எழுத்தின் வழியே
பேசும் முயற்சி இத்தளம் என்பது ஒரு கோணம் என்றால், எனக்கான
எழுத்துப் பயிற்சி என்பது மற்றொரு கோணம்.
முகநூல் உள்ள குறைகளில் ஒன்று
பழைய பதிவுகள் பார்வைக்கு எளிதில் கிடைத்து விடாது. டைம்லைன் என்பது நிகழ்ந்துக் கொண்டிருக்கும்
ஒற்றை கோடு. ஆனால் வலைத்தளங்கள் அக்குறையை எளிதாக கலைந்து விடுகின்றன. அதுவே எனது குடிபெயர்ப்புக்கும்
காரணம்.
ஈராயிரத்திற்கும் மேலான அகவை
கொண்ட தமிழ் மொழியின் எழுத்துகளில் என் கை ரேகையும் பதிவது தமிழின் பெருமிதங்களில்
ஒன்றே தவிர. வேறல்ல.
இறுதியாய் அனைவரின் அன்பையும்
ஆதரவையும் எதிர்பார்த்து... (க்ளிஷே என்றெல்லாம் கலாய்க்க கூடாது. இது நம் பண்பாடு)
-
பிரபா
கருத்துகள்
கருத்துரையிடுக