முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நினைவுகள் காலத்தின் தூதுவர்கள்

சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு (தமிழில் கே.வி.ஷைலஜா)
பகிர்வு:

 "ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று
ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை,
அது உங்களுக்காகப் பொத்தி வைத்துக் காத்திருக்கும்
எப்போதும்"
- பாலசந்திரன் சுள்ளிக்காடு

வாழ்ந்துப் பார்ப்பது மட்டும் தான் வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ள ஒரே வழி என்று குறிப்பிடும் பாலசந்திரன் வாழ்வின் இரகசியங்களை காலத்தில் அவை ஒளிந்து விளையாடும் மாயங்களைப் பதிந்து செல்கிறார்.

தொடர்வண்டி பயணமொன்றில் துணையாக படித்த சிதம்பர நினைவுகள் உலகைக் குறித்தும் மனிதர்களைக் குறித்துமான பார்வைகளை ஒரு முறை நினைவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

பாலசந்திரன் மொழி அவரோடு நம்மையும் சேர்த்து பசியின் கொடுமையைத் தாளாது சாலையில் பரதேசியாக அலைபவனாகவும் கவிதைக்காகவும் கொள்கைக்காகவும் வீட்டைத் துறப்பவனாகவும் ஐந்து ரூபாய்க்கு சிவாஜி கணேசனின் பட விளம்பரத்தை வாசித்த பையன் 20 வருடங்களுக்குப் பிறகு அவர் கையாலே மது பரிமாறுவதை ஏற்கிறவனாகவும் இப்படியாக மகிழ்ச்சி, துயரம், சபலம், அவமானம், அன்பு, உறவு என வாழ்வை பிணைத்திருக்கும் சரடுகளோடு பயணிக்க வைக்கிறது.
மனிதர்களை மிகக் குறிப்பாக பெண்களை கடக்கிற அனுபவங்கள் நேர்மையோடு கடத்தப்படுகின்றன. பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு தனியார் பள்ளிக்கு மாறுகிறவர் அவமானங்களை பரிகாசங்களை எதிர் கொள்ளும் போது ஆதரவாக வகுப்பின் உள்ளிருந்து சிரிக்கும் சாரதாவின் நேர்மறை அலை, படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி சாஹினாவிடமிருந்து பெற்ற முத்தம் பின்னாளில் அவளின் தீக்காய முகத்தில் எதிர்பாராது திருப்பி கொடுத்தது, சபலத்தின் கட்டுகளினால் ஆட்பட்டதற்கு பலியாகிப் போன ஸ்ரீதேவி, ராதிகா, லைலா, பணத்தைக் கொடுக்காமல் இரவு ஏமாற்றப்பட்ட வேசி அன்போடு காலையில் கொடுத்து போன ஐந்து ரூபாய், மார்த்தா, அம்மா, அப்பா, தங்கை, மனைவி, மகன் என ஒரு மனிதன் கடக்க சாத்தியமான உயர்வு தாழ்வுகளை உணர்ச்சிபூர்வமாக முன்வைப்பதில் எவ்வித சுய பிரகடனமும் தென்படாதது பாலசந்திரனின் நிலைப்பாட்டைத் தெளிவாக்குகிறது.

சோர்ந்து போய் உலகின் மீதும் நமக்கான விதியின் மீதும் நம்பிக்கையிழக்கும் போது உலகம் அதை விடப் பெரிதானது என உணர்த்தும் தருணங்களை அறிமுகப்படுத்துகிறது சிதம்பர நினைவுகள்.

சிற்பங்களும், கல்தூண்களும், உயர்ந்த கோபுரமும் மறைந்து வயதான கிழவர் தான் இருக்கும் வரை கவனித்துக் கொள்ளத் துடிக்கும் மனைவியின் மீது கொண்டிருக்கும் தீராத அன்பின் சாட்சியை சொல்லும் முதல் கட்டுரையில் தொடங்கும் நூல், கமலாதாஸுக்கு ஸ்வீடிஷ் கவிஞர் ஷென் எஸ்ப்மெர்க் வெளிப்படுத்தும் அன்பின் பரிமாறுதல் பேசும் இறுதி கட்டுரையில் முடிவடைகிறது. இடைப்பட்ட 18 கட்டுரைகளிலும் வாழ்வின் பல நிறங்கள்.

ஒரு சுவாரசியமான மனிதனாக நான் பாலசந்திரனைப் பார்க்கிறேன். எல்லா நிலைகளிலும் வாழ்வின் மீதான அவரின் நிலைப்பாடும் எதிர்வினையும் மனிதர்களுக்கான பாடங்கள். தன் கண் முன்னே கடந்து போகும் இறப்புகள், அதன் பாதிப்புகள், நினைவுகள் எவ்வித சலனமுமற்றதாக உலகம் நிச்சயம் இருக்க போவதில்லை என்பதை உரக்கச் சொல்கிறது. அது மகா நடிகரான சிவாஜியாக இருக்கட்டும், கேரளத்து தெருக்களில் பரதேசியாக அலைந்த பாலசந்திரனாக இருக்கட்டும் நானாகவோ நீங்களாகவோ இருக்கட்டும் காலத்தின் அலைகளில் அடித்துச் செல்லும் கட்டைகளாக தான் இருக்கிறோம். நம் நினைவுகளே நமக்கான காலத்தைக் காட்டுகிறது.

மொழிப்பெயர்ப்பா என ஆச்சரியப்பட வைக்கிறது ஷைலஜா அவர்களின் நடை. சிதம்பர நினைவுகளில் தொலைந்துப் போன என்னை மீட்பதற்கு ஒரு தேநீர் தேவைப்பட்டது. உங்களுக்கு எப்படியோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...