முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகிழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு அரும்பின் மடல்

An oak tree is a daily reminder  
that great things often have small beginnings.
-Matshona Dhliwayo

இடது கையை மேலாக தூக்கி கைபேசியை உயர்த்தி அதில் செருகப்பட்டிருக்கும் செல்ஃபி ஆப்பின் வழியே தன்னைத் தானே படம் எடுத்து உங்கள் பார்வைக்கு பதிவிடும் வழக்கமான செயலின் மாறுபட்ட வடிவம் தான் இந்த தளத்தின் தொடக்கம். அதில் என் முகத்தின் வழியே உணர்ச்சிகளைப் படிப்பீர்கள். இதில் எழுத்தின் வழியே. வேறுபாடு அவ்வளவே.

இயற்கையாகவே நான் அதிகம் பேசக் கூடிய கதாபாத்திரம் இல்லை. அறிமுகமானவுடனே கவர்ந்து விடும் அளவிற்கு ஹாஸ்யம் கூட நிறைந்தவன் இல்லை. அந்த தயக்க குணமே என்னை எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் பிடிப்புள்ளவனாக்கியது.

என்னிடமிருந்து எவ்விதமான செய்திக்கும் உடனடி எதிர்வினையும் எளிதில் கிடைத்து விடாது. நான் அதற்கிட்ட பெயர் சோம்பல். என் அப்பாவின் வார்த்தைகளின் படி 'ஃபிரசன்ஸ் ஆப் மைண்ட்' குறைவு.

எந்த செயலுக்கும் ஒரு தூண்டுதல் உண்டு என்கிற அறிவியல் விதிப்படி இத்தளத்தின் தொடக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. நான் பேச விரும்புகிறேன் - இந்த ஒற்றை வரியிலிருந்து தான் முகிழ் என்கிற வலைப்பூ முகிழ்ந்திருக்கிறது.


கணக்கியலில் குறிப்பிடப்படும் திருத்தியமைக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்று Materiality Principle என்பது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு மிகச் சரியாய் தெரியவில்லை. அதன் பொருள் முக்கியத்துவம் அற்ற, தொடர்பில்லாத விஷயங்களை புறக்கணித்து விடலாம் அல்லது வேறு ஏதாவதுடன் இணைத்துக் கொள்ளலாம் என்பது. அதற்கேற்ப இதில் தேவையில்லாத பொருத்தமில்லாத பதிவுகளை எழுதப் போவதில்லை என்பது என் உறுதியான நிலைப்பாடு. முக்கியத்துவம் எது என்பதற்கான வரையறையிலே பல்வேறு குழப்பங்கள் இருக்க தான் செய்கின்றன. அவற்றை முதலில் நான் விளங்கி கொண்டு உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் (!).

இந்த சிறு பையனின் சிறு முயற்சி இத்தொடக்கம். இதில் நான் செய்ய போகும் பிழைகளை செய்வதற்கு முன்னே சொல்லி மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.

- கவிதை என்ற பெயரில் எதையாவது எழுதி கவிஞனாக முயற்சிப்பவன் என்று சப் டைட்டில் போடுவது
- சமூக அக்கறை குறித்த கட்டுரைகளை அரைவேக்காட்டு தனத்துடன் சமைப்பது
- வாசித்த புத்தகத்துக்கு மதிப்புரை என்ற பெயரில் புத்தகம் எழுதியவரை விட அதிகம் யோசித்து எழுதத் துணிவது

இது போன்ற பிழைகளுடன் உங்களுக்கு தோன்றவிருக்கும் குற்றங்களுக்கும் சேர்த்து மன்னிப்பு கடிதத்தை சமர்பித்து விடுகிறேன். நிச்சயம் இவையெல்லாம் தொடராது பயில விரும்புகிறேன்.

உங்களுடன் என் எழுத்தின் வழியே பேசும் முயற்சி இத்தளம் என்பது ஒரு கோணம் என்றால், எனக்கான எழுத்துப் பயிற்சி என்பது மற்றொரு கோணம்.

முகநூல் உள்ள குறைகளில் ஒன்று பழைய பதிவுகள் பார்வைக்கு எளிதில் கிடைத்து விடாது. டைம்லைன் என்பது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒற்றை கோடு. ஆனால் வலைத்தளங்கள் அக்குறையை எளிதாக கலைந்து விடுகின்றன. அதுவே எனது குடிபெயர்ப்புக்கும் காரணம்.

ஈராயிரத்திற்கும் மேலான அகவை கொண்ட தமிழ் மொழியின் எழுத்துகளில் என் கை ரேகையும் பதிவது தமிழின் பெருமிதங்களில் ஒன்றே தவிர. வேறல்ல.

இறுதியாய் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து... (க்ளிஷே என்றெல்லாம் கலாய்க்க கூடாது. இது நம் பண்பாடு)

- பிரபா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...