முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறழ் உறவை எழுதுவது எதற்காக? - '57 சிநேகிதிகள்...' புத்தகத்தை முன்வைத்து ஒரு உரையாடல்...!

முன்குறிப்பு: வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பிளாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். வழக்கம் போல புது ஆண்டு பிறக்கும் போது உதித்து ஒரு திங்களுக்குள் மறையும் உறுதிமொழிகள் போல அல்லாமல் தொடர்ச்சியாக இந்த ஆண்டு செயல்பட வேண்டும் என நினைத்திருக்கிறேன். 

புத்தக வாசிப்பு சென்ற ஆண்டு நம்ப முடியாதளவுக்கு குறைந்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்கள் பல சொல்லலாம். ஆனாலும் அவை சமாளிப்புக்கு மட்டுமே உதவக் கூடும். இந்த ஆண்டு புதிதாக 1000 மணிநேர வாசிப்பு போட்டி ஒன்றில் இணைத்திருக்கிறேன். ஆரம்பித்து 10 நாட்கள் சென்றிருந்தாலும் நேற்று தான் தொடர்ச்சியாக 3 மணிநேரம் வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நாவல் ஒன்றை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். அந்த நாவலை முன்வைத்தே இந்தக் குறிப்பை எழுதுகிறேன். இனி நீங்கள் தொடர்ச்சியாக நான் எழுதுவதை இங்கு வாசிக்கலாம்.

ஐம்பத்தேழு சிநேகிதிகள் சிநேகித்த புதினம் 
எழுத்தாளர்: வா.மு.கோமு 
உயிர்மை வெளியீடு
முதற்பதிப்பு: டிசம்பர் 2022

பாலியல் சார்ந்த கதைகள் எழுதப்படுவதன் நோக்கம் என்ன? பாலியல் கதைகள் வெறும் கிளர்ச்சிக்கானவையா? அவை இலக்கியமாகுமா? வணிக இலக்கியம் என்பதற்கு நெருக்கமாக இருப்பதால் அதன் அசல்தன்மை என்னவாகும்?

இப்படியான பல கேள்விகள் இந்தக் குறிப்பை எழுதுவதற்கு முன்பு எனக்குத் தோன்றியது. எது இலக்கியம் என்கிற கேள்விக்கான பதில் மிக விரிவானது. எது இலக்கியம் எனத் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் அதே நேரத்தில் எவை எல்லாம் இலக்கியமல்ல என்கிற விவாதமும் பரவலாக நடைபெற்று வருகின்றன. 

சமீபத்தில் தமிழினியில் வெளிவந்த இராஜேந்திர சோழனின் கதை பெரும் சலசலப்பை இலக்கிய வட்டாரத்தில் உருவாக்கியது. மாமியாருக்கும் மணமகனுக்குமான பிறழ் உறவை பேசிய வகையில் அந்தக் கதையை விமர்சித்தவர்கள் அதனை மஞ்சள் பேப்பர் கதை என வர்ணித்தனர். அதற்கொரு மறுப்பாக இல்லை அதுவும் ஒருவகையில் கதை தான். அதிலுள்ள அழகியல் சார்ந்த விஷயங்களைப் பாருங்க என மற்றொரு புறம் ஆதரவு குரல்களும் எழுந்தன. அதை போலவே ஒரு பிறழ்உறவை இந்தப் புதினமும் பேசுகிறது. 

என்னுடைய வாசிப்பில் இதனை ஒரு முழுமையற்ற அல்லது அப்படியாக அமைய விரும்பிய புத்தகமாகப் பார்க்கிறேன். இன்னும் இதனை விரிவாக்க ஏராளமான கூறுகள் இருந்தாலும் திடீரென மழைக்காக நிறுத்தி வைக்கப்படும் விளையாட்டு போட்டி போல இந்த நாவலும் நிறைவு பெறுகிறது. 

எதார்த்த கிராமிய பாலியல் சார்ந்த கதைகளுக்காகப் பெரிதும் அறியப்படுபவர் வா.மு.கோமு. இதிலிருக்கும் கிளர்ச்சி சார்ந்த விஷயம் எந்தளவிலும் ஈர்க்கவில்லை எனினும் இந்நாவல் நடக்கிற 90-களின் கிராமத்து சூழலும் விசேஷமான சில சாங்கியங்களும் (தலையில் தேங்காய் விழுந்ததால் எழவு போலவே கருதி இறுதி சடங்கை நடத்துவது) அதை சார்ந்த ஆவணப்படுத்தல் தன்மையும் பகடி நிறைந்த உரையாடல்களும் முக்கியமாகப்படுகிறது. 

இந்நூலில் எடுத்துக்கொள்ள எதுவுமில்லை என முற்றிலும் புறந்தள்ளவோ படிக்கச் சுவாரசியமாக இருக்கிறது என்பதாலேயே மட்டும் ஏற்றுக் கொள்ளவோ முடியாத சூழலில் ஒரு வகையான வாசிப்பு என்றே சமாதானம் சொல்லிக் கொள்ள முடிகிறது.

தவளைகள் குதிக்கும் வயிறு, மரப்பல்லி, பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள் என ஏற்கனவே வா.மு.கோமுவின் எழுத்துக்களை வாசித்திருந்தாலும் எனக்கு இந்தப் புத்தகம் ஏமாற்றம் அளிக்கவே செய்கிறது. 

இரண்டு விதமான கதை லேயர்கள் லீனியராக பயணிக்கின்றன. இரண்டும் சந்திப்பதோ ஒன்றில் ஒன்று பாதிப்பதோ எதுவுமே நிகழவில்லை. இரண்டும் ஒரே தன்மையானவையா என்றால் அதுவும் இல்லை. ஒரு கதை போக்கில் அடங்காத பசங்க- அவர்கள் அப்பாக்கள்- ஆசிரியர்கள் இடையேயான பால்யம் சார்ந்த கதை. இன்னொரு பக்கம் சாராயம் காய்ச்சும் மாரிமுத்து-அவன் காதலிக்கும் மாமன் பெண்- தன் ஆசைக்காக அவனை விரும்பும் அத்தை முறையில் ஒருத்தி இவர்களுக்கு இடையேயான கதை.

ஆரம்பத்தில் வரும் சிறுவர்கள்- அப்பாக்கள்- ஆசிரியர்கள் இடையேயான உரையாடல்கள் வெறும் கொச்சையான வார்த்தைகளைப் புழங்க விடுவதற்காகவே அமைக்கப்பட்டது போல பேண்டஸி தன்மையோடே படுகிறது. அல்லது அந்தக் காலத்தில் அப்படி தான் இருந்தார்களா.

இத்தனைக்கும் 5 வகுப்பு மாணவர்களாக காட்டப்படுபவர்கள் பேசத் தொடங்கினாலே சாதாரணமாக நான்கு கெட்ட வார்த்தைகள் வருகின்றன. சாதிய ஏளனம் வேறு. அந்தச் சூழலை அப்படியான காலக்கட்டத்தை அறியாதவர்களாக இருப்பினும் அந்தப் பசங்களின் அப்பாக்கள் ஆசிரியர்கள் என்பதும் அவர்களின் உரையாடல்கள் கூட நம்பும்படி இல்லை. சுவையான கற்பனை என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். 

18+ நாவல். கொச்சையான வசைகளும் பாலியல் சார்ந்தும் படிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை எனில் இந்தப் புத்தகம் உங்களுக்கானது இல்லை.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...